Designed by Iniyas LTD
தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவு: மத்திய அரசு துக்கம் அனுசரிப்பு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையடுத்து, இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் கடந்த 75 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச.4) மாலை 5 மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை இரவு வரை அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. தில்லியிலிருந்து எய்ம்ஸ் மருத்துவர்களும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை குறித்து ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா இறந்துவிட்டார் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
அதன்பின்னர் அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு, சென்னை ராஜாஜி அரங்கில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வரின் மறைவையடுத்து, 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதேபோல், பள்ளி, கல்லூரிகளுக்கும் மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையடுத்து, இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.