Designed by Iniyas LTD
தற்கொலை தாக்குதல் தொடர்பில் கோத்தபாய சாட்சியம்!
தற்கொலை தாக்குதல் ஊடாக கொழும்பு, பித்தளை சந்தியில் வைத்து தன்னை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் குறித்து இது வரை தான் எந்த தரப்பிடமும் முறைப்பாடளிக்கவில்லை எனவும் சம்பவம் இடம்பெற்று ஏழு வருடங்களின் பின்னர் கடந்த 2013 ஆம் ஆண்டில் மட்டும் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு ஒரே ஒரு வாக்கு மூலம் மட்டும் வழங்கியதாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ நேற்று சாட்சியமளித்தார்.
பயங்கரவாத விவகாரங்கள் குறித்த வழக்குகளை விசாரணை செய்து முடிக்க ஏற்படுத்தப்பட்ட விசேட மேல் நீதிமன்றின் ஆணையாளர் ஐராங்கனி பெரேரா முன்னிலையில் சாட்சியமளிக்கும் போது, 2 ஆவது சந்தேக நபரின் சட்டத்தரணியான சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசாவின் குறுக்கு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த சாட்சியத்தை பதிவு செய்தார்.
அத்துடன் தான் பாதுகாப்பு செயலாளராக பதவியேற்கும் போது போர் நிறுத்தமொன்று அமுலில் இருந்ததாகவும், எனினும் அதன்போதும் புலிகள் போரொன்றுக்கு தயாராகிக்கொண்டிருந்ததாக உளவுத் தகவல்கள் ஊடாக தாம் உறுதி செய்துகொண்டதாகவும் அக்காலப்பகுதியில் புலிகளிடம் சிறிய ரக விமானங்கள் இருந்ததாகவும் அவர் சாட்சியமளித்தார்.
அத்துடன் புலிகள் போர் நிறுத்தத்தை முறித்து தாக்குதல் நடத்தினால் மறுகணமே பதில் தாக்குதல் நடத்தும் வகையில் தாமும் உளவுத் தகவல்களை சேகரித்து 76 விசேட படையணிகளை உருவாக்கி போருக்கு குறித்த போர் நிறுத்த காலப்பகுதியில் தயாரானதாக வும் அவர் மன்றில் தெரிவித்தார்.
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள பித்தளை சந்திப் பகுதியில் கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் திகதி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவை இலக்கு வைத்து குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இதன்போது கோத்தபாய ராஜபக் ஷவின் பாதுகாப்பு அதிகாரிகள் மூவர் உயிரிழந்ததுடன் மேலும் 9 உத்தியோகத்தர்கள் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் தற்கொலை குண்டுதாரியான பாலசிங்கம் விஜேகுமார் அல்லது அப்துல் லதீப் முஹம்மது பரீத் அல்லது கதிர் அல்லது அன்பழகன் என்பவருடன் சேர்ந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளரை கொலை செய்ய திட்டமிட்டமை, பாதுகாப்பு தரப்பினர் மூவரைக் கொலை செய்தமை, அதற்கு ஒத்தாசையாக இருந்தமை உள்ளிட்ட 13 குற்றச்சாட்டுக்களின் கீழ் 5 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட மா அதிபர் கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
41 சாட்சியாளர்கள், 13 வழக்குப் பொருட்களுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் பொன்னுசாமி, சிவலிங்கம் அருள், பத்மநாதன் ஐயர், சந்திரபோஸ், செல்லையா தயாளன் ஆகியோருக்கு எதிராக சட்ட மா அதிபர் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.
ஐந்தாவது சந்தேக நபர் இல்லாமலேயே இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டு வருகிறது. சந்தேக நபர்களுக்கு எதிராக பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத் தின் 5 ஆவது அத்தியாயத்தின் கீழும் தண் டனை சட்டக் கோவையின் 113 (அ), 102 உள்ளிட்ட பிரிவுகளின் கீழும் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட 1405/14 ஆம் இலக்கத்தை உடைய அதி விசேட வர்த்தமானியின் பிர காரம் பிரகடனம் செய்யப்பட்ட அவசர கால சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவா கவும் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட் டுள்ளன.
இந் நிலையில் இந்த வழக்கு மீதான சாட்சி விசாரணைகள் நேற்று ஆரம்பமாகின.
இதன்போது சந்தேக நபர்களில் ஆஜராகியிருந்த 4 பேருக்கும் அவர்கள் மீதான குற் றச்சாட்டுக்கள் வாசித்து காட்டப்பட்டன. இதன்போது அந் நால்வரும் தாம் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நிரபராதிகள் என தனித்தனியாக அறிவித்தனர்.
இந் நிலையில் சாட்சி விசாரணைகள் ஆரம்பமானது. இந்த விசாரணைகள் தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் அமைந்திருந்தமை விசேட அம்சமாகும்.
இந் நிலையில் நேற்று நீதிமன்ற அறிவித் தல் பிரகாரம் மன்றில் ஆஜரான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ முதலில் சாட்சியமளித்தார். குறித்த சாட்சியத்தை அரசின் பிரதி சொலிசிற்றர் ஜெனரல் ரொஹான் அபேசூரிய நெறிப்படுத்தியதுடன் அவருக்கு உதவியாக சிரேஷ்ட அரச சட்டவாதி நயோமி விக்ரமசேகர செயற்பட்டார்.
அந்த சாட்சியத்தை சுருக்கமாக தருகி றோம்.
பிரதி சொலிசிற்றர் ஜெனரல்: நீர் பாதுகாப்பு செயலாளராக பதவியேற்க முன்னர் என்ன செய்தீர்?
கோத்தா: அதற்கு முன்னர் நான் இராணுவத்தில் சேவையாற்றினேன். சுமார் 20 வருடங்கள் அவ்வாறு சேவையாற்றினேன்.
பிரதி சொலிசிற்றர் ஜெனரல்: அப்படியானால் எப்போது இராணுவத்தில் இணைந்தீர்? எப்போது ஓய்வுபெற்றீர்?
கோத்தா: 1970 ஆம் ஆண்டு நான் இராணுவத்தில் சேர்ந்தேன். 1991 ஆம் ஆண்டு ஓய்வுபெற்றேன்.
பிரதி சொலிசிற்றர் ஜெனரல்: இராணுவத்தில் இருந்த போது எங்கு சேவை செய்தீர்கள்?
கோத்தா: இலங்கையின் பல பாகங்களிலும் வேலை செய்திருக்கிறேன். குறிப்பாக கூடிய காலம் வடக்கிலேயே சேவை செய்தேன். அதற்கு மேலதிகமாக மாத்தளை, அனுராதபுரம் பகுதிகளிலும் சேவையாற்றினேன்.<பிரதி சொலிசிற்றர் ஜெனரல்: எந்த தர நிலையில் நீர் சேவையாற்றினீர்?கோத்தா: நான் இராணுவத்தில் கெடட் அதிகாரியாகவே இணைந்துகொண்டேன். பின்னர் 1971 ஆம் ஆண்டு 2 ஆவது லெப்டி னன்ட்டாக பதவி உயர்த்தப்பட்டேன். பின் னர் லெப்டினன்ட், கெப்டன், மேஜர், லெப்டினன்ட் கேர்ணல் தரம் வரை பதவி உயர்வு பெற்றேன்.
பிரதி சொலிசிற்றர் ஜெனரல்: ஓய்வுபெற்ற பின்னர் அரச பணிகள் எதிலும் ஈடுபட்டீரா?
கோத்தா: ஆம், 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாதுகாப்பு செயலாளராக நான் நியமிக்கப்பட்டேன்.பிரதி சொலிசிற்றர் ஜெனரல்: இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றதும் எங்கு நீர் வாழ்ந்தீர்?கோத்தா: அமெரிக்காவில், அங்கு எனக்கு குடியுரிமையும் கிடைத்தது
பிரதி சொலிசிற்றர் ஜெனரல்: நீங்கள் பாதுகாப்பு செயலாளராக கடமையேற்கும் போது பாதுகாப்பு அமைச்சர் யார்? பிரதியமைச்சர் யார்?
கோத்தா: ஜனாதிபதியே அப்போது பாதுகாப்பு அமைச்சர், பிரதியமைச்சர் யாரும் இருக்கவில்லை.
பிரதி சொலிசிற்றர் ஜெனரால்: பயங்கரவாதத்துக்கு எதிரான தாக்குதல்களில் நீர் பங்கேற்றுள்ளீரா? அப்படியானால் சுருக்கமாக அதனை கூறுங்கள்?<
கோத்தா: ஆம், வடமராட்சி மீட்பின் போது நான்கு படையணிகள் பங்கேற்றன. அதில் பிரதான படையணியின் கட்டளை தளபதியாக நானே இருந்தேன்.
இதனை விட 1990 ஆம் ஆண்டு இரண்டாம் ஈழப் போர் ஆரம்பமான போது யாழ். கோட்டையில் சிறைப்பட்ட இராணுவ வீரர்கள், பொலிஸாரை மீட்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்த படை நடவடிக்கையின் கட்டளைத் தளபதியாக நான் இருந்தேன். அக்காலப்பகுதியில் திருகோணமலை, வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் பல படை நடவடிக்கைகளில் நான் பங்குகொண்டேன்.&
lt;
பிரதி சொலிசிற்றர் ஜெனரல்: நீங்கள் பதவியேற்ற போது நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் எப்படி இருந்தது?
கோத்தா: நான் பதவியேற்ற போது வவுனியாவின் பெரும்பலான பகுதி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தன. கிழக்கில் மூன்றில் இரண்டு பங்கும் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தன. எனக்கு கிடைத்த உளவுத் தகவல்களின் படி அப்போது 35000 பேர் வரை புலிகளின் ஆயுதப்படையில் இருந்தனர். இதனை விட 30000 இற்கும் அதிகமானோர் சுயேட்சையாக புலிகளுடன் இணைந்திருந்தனர். இதனை விட கொழும்பு உள்ளிட்ட நகரங்களில் தாக்குதல் நடத்தும் வண்ணம் அவர்களது வலையமைப்பு பரந்திருந்தது.
அவர்களிடம் விஷேட பீரங்கிகள் இருந்தன. கடலின் பெரும்பாலான பகுதியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். தாக்குதல் படகுகள் அவர்களிடம் இருந்தன. உளவுத் தகவல்களின் படிஅவர்களிடம் விமானப்படையும் சிறிய ரக விமானங்களும் இருந்தன.
போர் நிறுத்த காலப்பகுதியில் மட்டும் புலிகள் 3000 தடவைகள் ஒப்பந்தத்தை மீறியிருந்தனர். புலிகளின் நிருவாகப் பகுதிகளுக்குள் இராணுவம் , பொலிசார் செல்லவே முடியாத நிலை காணப்பட்டது.
வடக்கில் புலிகளால் தனியான பொலிஸ், வங்கி, மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்றன. மத்திய அரசின் எந்த நிர்வாக நடவடிக்கைகளும் அங்கு இடம்பெறவில்லை.
பிரதி சொலிசிற்றர் ஜெனரல்: அப்படியானால் பாதுகாப்பு செயலாளராக பதவியேற்ற பின்னர் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்தீர்?
கோத்த: நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக பாதுகாப்பு செயலர் செயற்பட வேண்டும். அதன்படி உரிய தரப்புடன் இணைந்து பாதுகாப்பை உறுதிப்படுத்த நான் பல்வேறு திட்டங்களை வகுத்தேன். உளவுப் பிரிவு, பொலிஸ், இராணுவம் உள்ளிட்ட முப்படைகளை ஒரே அணியில் திரட்டி உளவுத் தகவல்கள் அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்தேன்.
பிரதி சொலிசிற்றர் ஜெனரல்: பாதுகாப்பு செயலாளருக்கு மேலதிகமாக நீர் வேறு அரச பதவிகளை வகித்தீரா?
கோத்தா: ஆம், 2010 ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சின் கீழ் நகர அபிவிருத்தி அமைச்சும் கொண்டு வந்த நிலையில் அதன் செயலாளராகவும் நான் கடமையாற்றினேன்.
பிரதி சொலிசிற்றர் ஜெனரல்: பாதுகாப்பு செயலாளராக நீர் எங்கு வசித்தீர்?
கோத்தா: பெளத்தாலோக்க மாவத்தையில் உள்ள ‘ ஸ்டன்வோ கிரசன்ட் ‘ பாதுகாப்பு செயலாளரின் உத்தியோக பூர்வ இல்லத்திலேயே வசித்தேன்.
பிரதி சொலிசிற்றர் ஜெனரல்: உமது அமைச்சு எங்கிருந்தது.
கோத்தா: காலி முகத்திடல் பிரதேசத்துக்கு அண்மையில்
பிரதி சொலிசிற்றர் ஜெனரல்: 2005 இல் பாதுகாப்பு செயலாளராக பதவியேற்ற நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன?
கோத்தா: அப்போதைய பயங்கரவாத நிலைமைகளை கட்டுப்படுத்த பூரண நடவடிக்கைகளை முன்னெடுத்தேன். இது தொடர்பில் எமது முப்படையினருக்கும் விஷேட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. உளவுப் பிரிவுகளை ஒன்று திரட்டி பயங்கரவாதத்தை எதிர்கொள்ள புதிதாக 76 புதிய படையணிகளை உருவாக்கினேன்.
பிரதி சொலிசிற்றர் ஜெனரல்: இக்காலப்பகுதியில் உமக்கு பாதுகாப்பளித்தது யார்?
கோத்தா: இராணுவத்தின் விஷேட குழு எனக்கு பாதுகாப்பளித்தது. இராணுவ தளபதியின் நேரடி கட்டுப்பாட்டில் அக்குழு செயற்பட்டது.
பிரதி சொலிசிற்றர் ஜெனரல்: 2005 டிசம்பர் முதல் 2006 டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் உமது பாதுகாப்பு தொடர்பில் உளவுத் தகவல்கள் அடிக்கடி திரட்டப்பட்டனவா?
கோத்தா: எனது பாதுகாப்பு தொடர்பிலான தகவல்கள் எனக்கு நேரடியாக வராது. அது எனது பாதுகாப்பை முன்னெடுத்த குழுவுக்கே செல்லும். எனினும் பாதுகாப்பு குழு கூட்டத்தில் அவை எமக்கு அறியத்தரப்படும். அதன்படி அப்போதைய ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர், இராணுவ, கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகளுக்கு புலிகளிடமிருந்து பாரிய அச்சுறுத்தல் இருந்தன.
பிரதி சொலிசிற்றர் ஜெனரல்: அதன்படி உமக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததா?
கோத்தா: ஆம், இராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. குண்டு துளைக்காத கார் பயன்பாட்டுக்கு தரப்பட்டது.
பிரதி சொலிசிற்றர் ஜெனரல்: அதன் ரகம் என்ன?
கோத்தா: அது பி.எம்.டப்ளியூ. ரகத்தை சேர்ந்தது. இது போன்ற 4 கார்கள் ஜனாதிபதி செயலக கட்டுப்பாட்டில் இருந்தன. அவை எனக்கும் முப்படை தளபதிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டன.
பிரதி சொலிசிற்றர் ஜெனரல்: உமது பாதுகாப்புக்கு அப்போது (2006) எத்தனைப் பேர் இருந்தனர்.
கோத்தா: சரியான எண்ணிக்கை எனக்கு தெரியாது. எனினும் 50 பேர் வரையில் இருந்தனர்.
பிரதி சொலிசிற்றர் ஜெனரல்: உமது பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்தது யார்?
கோத்தா: 4 அதிகாரிகள் இருந்தனர். ஜயந்த ரத்நாயக்க என்பவர் பிரதானமானவர்.
பிரதி சொலிசிற்றர் ஜெனரல்: நீங்கள் ஒரு இடத்துக்கு பயணிக்கும் போது உமது பி.எம்.டப்ளியூ. வாகனத்துக்கு மேலதிகமாக எத்தனை வாகனங்கள் கூட வரும்?
கோத்தா: சாதாரணமாக 3 மோட்டார் சைக்கிள்கள், 3 டிபண்டர்கள்
பிரதி சொலிசிற்றர் ஜெனரல்: அவ்வாகனங்களில் பயணிப்போர் இராணுவத்தினரா?
கோத்தா: ஆம்
பிரதி சொலிசிற்றர் ஜெனரல்: நீங்கள் ஒரு இடத்துக்கு போகும் போது அங்கு போகும் பாதையை யார் தீர்மானிப்பது?
கோத்தா: எனது பாதுகாப்பு அதிகாரிகளே தீர்மானிப்பர். இதற்காக பிரதேச பொலிஸாரின் ஒத்துழைப்பும் பெறப்படும்
பிரதி சொலிசிற்றர் ஜெனரல்: உமது போக்கு வரத்து திட்டத்தை முன்கூட்டியே அவர்கள் தயாரிப்பார்களா?
கோத்தா: எனது ஒரு நாள் செயற்றிட்டங்களை நான் எனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வழங்குவேன். அவர்கள் தீர்மானிப்பர்.
பிரதி சொலிசிற்றர் ஜெனரல்: உமது பயணப்பாதை குறித்த அறிவுறுத்தல்கள் யாருக்கு கிடைக்கும்?
கோத்தா: எனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு
பிரதி சொலிசிற்றர் ஜெனரல்: 2005 டிசம்பர் முதல் 2006 டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் எந்த மாதத்தில் இருந்து பி.எம்.டப்ளியூ காரினை பயன்படுத்தினீர்?
கோத்தா: மாதம் எல்லாம் ஞாபகம் இல்லை, எனினும் கிடைத்தது முதல் அதனையே பயன்படுத்தினேன்.
பிரதி சொலிசிற்றர் ஜெனரல்: 2006 ஆம் ஆண்டில் உமக்கு மறக்க முடியாத ஒரு பயங்கர அனுபவம் உள்ளது அல்லவா?
கோத்தா: ஆம்
பிரதி சொலிசிற்றர் ஜெனரல்: அந்த திகதி?
கோத்தா: டிசம்பர் மாதம் முதலாம் திகதி
பிரதி சொலிசிற்றர் ஜெனரல்: அந்த சம்பவம் குறித்து கூற முடியுமா?
கோத்தா: அன்றைய தினம் வீட்டில் இருந்து அமைச்சுக்கு செல்ல முன்னர் அலரி மாளிகைக்கு செல்வதற்காக நான் சென்றுகொண்டிருந்தேன்
பிரதி சொலிசிற்றர் ஜெனரல்: அலரி மாளிகையில் விஷேட கூட்டம் ஏதும் இருந்ததா?
கோத்தா: ஆம், எனது ஞாபகப்படி பாதுகாப்புக் குழு கூட்டம் இருந்தது.
பிரதி சொலிசிற்றர் ஜெனரல்: பாதுகாப்புக் குழுவின் தலைவர் யார்?, ஏனைய உறுப்பினர்கள் யார்?
கோத்தா: தலைவர் ஜனாதிபதி. உறுப்பினர்களாக பாதுகாப்பு செயலாளர், ஜனாதிபதி செயலாளர், நிதியமைச்சின் செயலாளர், முப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர், உளவுப் பிரிவுகளின் பிரதானிகள் ஆகியோர் பங்கேற்பர்
பிரதி சொலிசிற்றர் ஜெனரல்: நீர் எங்கிருந்து புறப்பட்டீர்?
கோத்தா: வீட்டிலிருந்து
பிரதி சொலிசிற்றர் ஜெனரல்: அப்போது நேரம்
கோத்தா: முற்பகல் 10.30 இற்கும் 10.35 இற்கும் இடைப்பட்டதாக இருக்கும்.
பிரதி சொலிசிற்றர் ஜெனரல்: எந்த வாகனத்தில்?
கோத்தா: பி.எம்.டப்ளியூ. வில்
பிரதி சொலிசிற்றர் ஜெனரல்: அதன் சாரதி யார்?
கோத்தா? சிவில் ஒருவர். அவரது பெயர் குமார
பிரதி சொலிசிற்றர் ஜெனரல்: உம்மையும் சாரதியையும் தவிர வேறு யாராவது காரில் இருந்தனரா?
கோத்தா: ஆம், எனது பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் இருந்தார்.
பிரதி சொலிசிற்றர் ஜெனரல்: யார் அது?
கோத்தா: கப்புகே< /span>
பிரதி சொலிசிற்றர் ஜெனரல்: அவரா உமது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்?
கோத்தா? ஆம்
பிரதி சொலிசிற்றர் ஜெனரல்: அலரி மாளிகைக்கான பயணப்பாதை எது?
கோத்தா: வீட்டிலிருந்து ஸ்டான்லி விஜேரத்ன மாவத்தை ஊடாக கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையம் முன்பாக வந்து , கேம்பிரிஜ், மார்கஸ் பெர்னாண்டோ, அநாகரிக தர்மபால மாவத்தையூடாக, பித்தளை சந்தி, ஜேம்ஸ் பீரிஸ், பெரேரா மாவத்தை ஊடாக அலரி மாளிகை.
பிரதி சொலிசிற்றர் ஜெனரல்: வேறு பாதைகள்?
கோத்தா: வீட்டிலிருந்து பெளத்தாலோக்க மாவத்தை, பம்பலபிட்டி சந்தி, காலி வீதி, கொள்ளுபிட்டி ஊடாக அலரி மாளிகை
பிரதி சொலிசிற்றர் ஜெனரல்: 2006. டிசம்பர் முதலாம் திகதி நீர் எந்த பாதையைப் பயன்படுத்தினீர்?
கோத்தா: முதலில் கூறிய பாதையை
பிரதி சொலிசிற்றர் ஜெனரல்: அலரி மாளிகை நோக்கி செல்லும் போது அன்று விஷேட சம்பவங்கள் ஏதும் பதிவானதா?< /span>
கோத்தா: ஆம், அன்று பித்தளை சந்தியில் குண்டுத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
பிரதி சொலிசிற்றர் ஜெனரல்: சம்பவத்தின் போது பி.எம். டப்ளியூ வண்டியில் நீர் எந்த இடத்தில் அமர்ந்திருந்தீர்
கோத்தா: பின்னிருக்கையில் இடது புறமாக அமர்ந்திருந்தேன். எனக்கு முன் இருக்கையில் எனது பாதுகாப்பு உதவியாளர் இருந்தார்.
பிரதி சொலிசிற்றர் ஜெனரல்: என்ன நடந்தது என ஞாபகம் உள்ளதா?
கோத்தா: ஆம், அப்பகுதியில் உள்ள பொது வாசிகசாலையைத் தாண்டி, செஞ்சிலுவைச் சங்க தலைமையகம் அருகே தர்மபால மாவத்தைக்குள் நான் பயணித்த கார் நுழைந்தது. அப்போது அங்கு சிவப்பு நிற சமிக்ஞை விளக்கு எரிந்துகொண்டிருந்த நிலையில் எதிர்த்திசையிலேயே எமது வாகனம் பயணித்தது. அதனூடாக பித்தளை சந்தியை நாம் அடைந்தோம்
பிரதி சொலிசிற்றர் ஜெனரல்: பித்தளை சந்தியில் இருந்து எந்த பக்கம் திரும்ப முற்பட்டீர்கள்?
கோத்தா: பித்தளை சந்தியில் இருந்து வலது பக்கமே திரும்புவதாக இருந்தது
பிரதி சொலிசிற்றர் ஜெனரல்: திரும்ப வாய்ப்பு கிடைத்ததா?
கோத்தா: எனது வாகனம் திரும்ப வில்லை. முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் திரும்பியது.
பிரதி சொலிசிற்றர் ஜெனரல்: முன்னால் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருந்தனரா?
கோத்தா: ஆம், ஒரு மோட்டார் சைக்கிள் டிபண்டர் ரக வாகனம் ஆகியன சென்றன.
பிரதி சொலிசிற்றர் ஜெனரல்: உமது காரின் பக்கவாட்டில் மோட்டார் சைக்கிள்கள் பயணித்தனவா?
கோத்தா: ஆம், இரு பக்கத்திலும் கதவுகளுக்கு நேரே இரு மோட்டார் சைக்கிள்கள் பயணித்தன
பிரதி சொலிசிற்றர் ஜெனரல்: அப்போது என்ன நடந்தது?
கோத்தா: திடீரென பாரிய சத்தம் ஒன்று தீ பிளம்பு தெறிக்க கேட்டது. அதன் போது நான் காரினுள் வலது புறத்தை நோக்கி தூக்கி வீசப்பட்டேன். கார் கண்ணாடிகள் தூளாகாத போதும் வெடிப்புக்கு உள்ளாகின.
எனக்கு முன்பாக மோட்டார் சைக்கிள் ஒன்று தீயில் எரிந்துகொண்டிருந்தது. அப்போது தான் எம்மை நோக்கி குண்டுத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளதை உணர்ந்தேன்.
பிரதி சொலிசிற்றர் ஜெனரல்: வெடிப்பின் பின் கார் முன்னோக்கி நகர்ந்ததா?
கோத்தா: இல்லை. அந்த இடத்திலேயே நின்றது.
பிரதி சொலிசிற்றர் ஜெனரல்:ஏன் சாரதிக்கு ஏதும் காயங்களா?
கோத்தா: இல்லை. காயங்கள் இல்லாத போதும் சாரதியும் பாதுகாப்பு உத்தியோகத்தரும் அதிர்ச்சியில் உறைந்திருந்தனர்.
பிரதி சொலிசிற்றர் ஜெனரல்: நீர் வாகனத்தில் இருந்து இறங்க முற்பட்டீரா?
கோத்தா: ஆம், எனினும் முடியவில்லை. காரின் கதவுகள் ‘லொக்’ செய்யப்பட்டிருந்தன.
பிரதி சொலிசிற்றர் ஜெனரல்: எப்படி வெளியே வந்தீர்?
கோத்தா: பின்னர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கதவை உடைத்து வெளியேற்றினர்.
பிரதி சொலிசிற்றர் ஜெனரல்: அதன்பின்னர் அவ்விடத்தை நீர் மேற்பார்வை செய்தீரா?
கோத்தா: இல்லை. எனக்கு அவ்விடத்தில் நடமாட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இடம் தரவில்லை. நேரடியாக டிபண்டரில் ஏறி அலரி மாளிகைக்கு அழைத்துச் சென்றனர்.
பிரதி சொலிசிற்றர் ஜெனரல்: அங்கு சென்ற பின்னர் சம்பவம் தொடர்பில் என்ன கேள்விப்பட்டீர்?
கோத்தா:குண்டு வெடிப்பில் எனது பாதுகபபு உத்தியோகத்தர்கள் மூவர் உயிரிழந்து மேலும் 9 பேர் படுகாயமடைந்த செய்தி கிடைத்தது.
பிரதி சொலிசிற்றர் ஜெனரால்: குண்டு சரியாக எங்கு வைத்து எப்படி வெடிக்கச் செய்யப்பட்டது?
கோத்தா: தெரியாது. நான் காணவில்லை. சத்தம் , உணர்ச்சிகளினாலேயே குண்டுத் தாக்குதலை உணர்ந்தேன்.
பிரதி சொலிசிற்றர் ஜெனரால்: இது தொடர்பில் பொலிஸாருக்கு வாக்கு மூலம் வழங்கினீரா?
கோத்தா: ஆம்
இதனையடுத்து பிரதி சொலிசிற்றர் ஜெனரல் ரொஹான் தனது சாட்சி நெறிப்படுத்தலை நிறைவு செய்தார். இதனையடுத்து மேல் நீதிமன்ற ஆணையாளர் ஐராங்கனி பெரேரா குறுக்குக் கேள்விகள் உள்ளதா என சந்தேக நபர்களின் சட்டத்தரணிகளிடம் கேட்டார். இதன்போது அனைவரும் அமைதியாக இருக்க , இரண்டாவது சந்தேக நபரின் சட்டத்தரணியான சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா குறுக்குக் கேள்விகள் உள்ளதாக கூறி கேட்டார்.
கே.வி. தவராசா: குண்டுவெடித்தது எனக் கூறுகிறீர்கள். இது தொடர்பில் பொலிஸாருக்கு வாக்கு மூலம் வழங்கினீரா?
கோத்தா: ஆம்
கே.வி. தவராசா: எத்தனை தடவைகள் வழங்கினீர்?
கோத்தா: ஒரே ஒரு தடவை
கே.வி. தவராசா: எப்போது வழங்கினீர், யாருக்கு வழங்கினீர்?
கே.வி. தவராசா: எத்தனை தடவைகள் வழங்கினீர்?
கோத்தா: எப்போது என்பது யாபகம் இல்லை, குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வழங்கினேன்.
கே.வி. தவராசா: திகதியை நான் ஞாபகப்படுத்தவா?
கோத்தா: ஆம்
கே.வி. தவராசா: 2013.07.25 அன்று நீர் வாக்கு மூலமளித்தீர்? இது சரி தானே..
கோத்தா: ஆம்.. நிச்சயமாக
கே.வி. தவராசா: அப்படியானால் சம்பவம் இடம்பெற்று 7 வருடங்களின் பின் வாக்கு மூலம் வழங்கியுள்ளீர், அதுவும் ஒரே ஒரு தடவை மட்டும்?
கோத்தா: ஆம்
கே.வி. தவராசா: சம்பவம் தொடர்பில் எங்கேனும் முறைப்பாடுகள் செய்துள்ளீரா?
கோத்தா: இது வரை இல்லை
அந்த கேள்விகளுடன் கோத்தா மீதான சாட்சி விசாரணை நிறைவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து மன்றின் நடவடிக்கைகள் பிற்பகல் 1.30 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டன. பின்னர் மீள மன்றின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கவே நேற்று மன்றில் ஆஜரான கோத்தாவின் பாதுகாப்பு உத்தியோகத்தரான கேர்ணல் சுரங்க ரந்தெனியவின் சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.
தான் பிரபுக்கள் பாதுகாப்புக்கு என இந்தியாவின் ‘ பிளக் கெட் ‘ படைப் பிரிவில் ஒரு மாதகாலம் பயிற்சி எடுத்ததாகவும், சம்பவத்தையடுத்து டிபண்டரில் வழமையாக வைத்திருக்கும் அலவாங்கை கொண்டுவந்தே குண்டு துளைக்காத காரின் கதவை உடைத்து கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிடோரை காரில் இருந்து மீட்டதாகவும் அவர் சாட்சியமளித்தார்.
இந் நிலையில் இந்த வழக்கு தொடர்பிலான விசாரணைகள் எதிர்வரும் ஜூலை 21 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.