Designed by Iniyas LTD
தில்லி சிறைகளில் 7 ஆயிரம் கைதிகள் இருக்க வேண்டிய இடத்தில் 14 ஆயிரம் கைதிகள்!
தில்லி சிறைகளில் 7,818 கைதிகள் இருக்க வேண்டிய இடத்தில் 14,132 கைதிகள் உள்ளனர் என்று மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் புதன்கிழமை கூறியதாவது:
தில்லி சிறைகளில் மொத்தம் 7,818 கைதிகள் அடைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளன. ஆனால் கடந்த மார்ச் 15ஆம் தேதி வரை தில்லி சிறைகளில் 14,132 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். திகார் சிறையில் விசாரணைக் கைதிகளும், குற்றவாளிகளும் தனித் தனியாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு நெரிசல் ஏதும் கிடையாது.
கடந்த மூன்று ஆண்டுகளில் திகார் சிறையில் கைதிகளிடையே 10 மோதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இரவில் தங்களை சிறையில் இருந்து வெளியே அனுப்பவில்லை என்பதால் திகார் சிறையில் சிறப்பு பாதுகாப்பு வார்டில் உள்ள கைதிகள் தங்களைத் தானே தாக்கி காயம் ஏற்படுத்தி கொள்கின்றனர்.
சில நேரங்களில் சிறையில் உள்ள பொது சொத்துகளுக்கும் சேதம் ஏற்படுத்தி விடுகின்றனர் என்றார். தில்லி சிறைக் கண்காணிப்பின்கீழ் திகார், ரோஹிணி ஆகிய இரண்டு சிறைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.