Designed by Iniyas LTD
நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டு வருவதற்கு லோக் அதாலத்
நாடு முழுவதுமுள்ள நீதிமன்றங்களில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டு வருவதற்கு தேசிய அளவில் லோக் அதாலத் என்ற மக்கள் மன்றம் நடத்தப்படுகிறது. கடந்த முறை நடந்த தேசிய லோக் அதாலத்தில், பிற மாநிலங்களைவிட அதிக வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்து தமிழ்நாடு முதலிடம் பெற்றது. இந்த நிலையில், வருகிற டிசம்பர் 12-ந் தேதி தேசிய லோக்அதாலத் நடைபெற உள்ளது. இதற்காக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை நீதிபதிகள் கலந்து கொண்ட ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது.
அதில், ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகள் சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, என்.பால்வசந்தகுமார், எஸ்.ராஜேஸ்வரன், பி.ஆர்.சிவகுமார், சி.டி.செல்வம், ரவிசந்திரபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு, மாவட்ட நீதிபதிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள். மேலும், கடந்தமுறை போல, வருகிற டிசம்பர் மாதம் நடைபெற உள்ள லோக் அதாலத்திலும் தமிழகம் முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ளும் விதமாக அதிக வழக்குகளை பைசல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று மாவட்ட முதன்மை நீதிபதிகளுக்கு, தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அறிவுரை வழங்கினார்.