Designed by Iniyas LTD
உண்ணாவிரதமிருந்த ஈழ அகதிகள் மருத்துவமனையில் அனுமதி!
திருச்சி சிறப்பு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளில் இருவர் தங்களை குடும்பத்தோடு சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டி , ஐந்தாவது நாளாக தொடர் பட்டினிப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் உடல் நிலை மோசமடைந்ததால் நேற்று இவர்கள் இருவரும் திருச்சி அரச மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு வருடங்களாக இவர்கள் இந்த தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். யுகப்பிரியன் செல்வரத்தினம் மற்றும் சுபாஸ் சந்தானப்பிள்ளை ஆகியோரே பட்டினிப் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களாவர்.
இவர்கள் அவுஸ்த்ரேலியா செல்ல முற்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்ததும் மீண்டும் ”Q” பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு திருச்சி தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.
இவர்களை விரைவில் விடுதலை செய்வதாக பல தடவை கூறி தங்களை Q பிரிவினர் ஏமாற்றி வருவதாகவும், இவ்வாறு தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் இவர்களின் குடும்பங்கள் மிகவும் கஷ்டப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். திருச்சி மற்றும் செய்யாறு தடுப்பு முகாம்களில் இலங்கை தமிழ் அகதிகள் சுமார் ஆறு வருடங்களுக்கும் மேலாக இவ்வாறு குடும்பத்தில் இருந்து பிரித்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதனால் பலர் மன நிலை பாதிக்கப்பட்டு மன நல சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். மேலும் இதில் யுகப்பிரியன் செல்வரட்னம் பல தடவை தற்கொலைக்கு முயற்சி செய்து காப்பாற்றப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
