Designed by Iniyas LTD
பயங்கரவாதியின் எச்சங்களை அகற்றுமாறு கோரி மீண்டும் மட்டக்களப்பில் போராட்டம்
மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள தற்கொலைதாரியின் மனித எச்சங்களை அகற்றுமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தலைமையில் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன்காரணமாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் நீர்தாரை பிரயோகம் மேற்கொள்ளும் வண்டிகளும் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அத்துடன், குறித்த பகுதியில் காவல்துறையினர், விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சீயோன் தேவாலய தற்கொலைதாரியான முகம்மது அஸாத்தின் உடற்பாகங்கள் மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு மட்டக்களப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் குறித்த உடற்பாகங்களை கள்ளியங்காடு இந்து மயானத்தில் இருந்து அகற்றுமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
உடற்பாகங்களை அகற்றும் வரையில் போராட்டத்தினை கைவிடப்போவதில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, நேற்றிரவும் இதுபோன்றதொரு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது காவல்துறையினரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் நான்கிற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.