தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது – நிமல் சிறிபால டி சில்வா..

பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணியை இலங்கை விமானப்படையே மேற்கொள்ளும் எனவும், இந்தியாவிடம் கையளிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் உரையாற்றிய போது சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

பலாலி விமான நிலைய அபிவிருத்தி தொடர்பான விரிவான திட்டத்தை தயாரிப்பது தொடர்பாக ,

இந்திய விமான நிலைய அதிகார சபையும், இந்திய வெளிவிவகார அமைச்சும் அண்மையில் உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டிருந்தன.

இந்த நிலையில்  பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணியை இந்தியாவிடம் கொடுக்கும் எண்ணம் இல்லை என்றும்,

ஊடகங்களில் வெளியாகிய செய்தியில் உண்மையில்லை என்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்  தெரிவித்திருந்தார்.

அதோடு சுற்றுலா அபிவிருத்தி நிதியம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை ஆகியன இணைந்து பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் என்றும்,

இதற்கான பணிகளை விமானப்படையே முன்னெடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதற்காக, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை 750 மில்லியன் ரூபாவையும், சுற்றுலா அபிவிருத்தி நிதியம் ஆயிரம் மில்லியன் ரூபாவையும் செலவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை பலாலி விமான நிலைய அபிவிருத்தி தொடர்பான விரிவான திட்டத்தை தயாரிக்கவுள்ளதாக இந்திய விமான நிலைய அதிகார சபை உத்தியோகபூர்வமான செய்திக் குறிப்பை வெளியிட்ட நிலையில்,

அமைச்சர் அதனை மறுத்திருப்பது புதுடில்லி அதிகார மட்டத்தில் குழப்பத்தை  ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிகபப்டுகின்றமை  குறிப்பிடத்தக்கது.

 

Comments
Loading...