Designed by Iniyas LTD
பின்லேடன் கொலைக்கு திட்டமிட்டது 4 வக்கீல்களா? வெளிவந்தது ரகசியம்!
அல்கொய்தா இயக்க தலைவன் ஒசாமா பின்லேடனை தீர்த்துக்கட்ட ஒபாமாவுக்கு சட்ட வழிமுறைகளை வகுத்து தந்தது 4 வக்கீல்கள் எனும் ரகசிய தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பின்லேடன் கொலை செய்யப்பட்டு 4 ஆண்டுகள் கழித்த நிலையில், ‛தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை இத்தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2011, மே 2ம் தேதி பாகிஸ்தானிலுள்ள அபோதாபாத்தில் பதுங்கி இருந்த ஒசாமா பின்லேடனை, அமெரிக்க படையினர் தங்களின் அதிரடி தாக்குதல் மூலம் கொன்றனர். பாகிஸ்தானுக்கே தெரியாமல் அவர்கள் நாட்டிலேயே நடந்த இத்தாக்குதலுக்கு, சட்ட வழிமுறைகளை அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வழக்கறிஞர்கள், ஸ்டீவன் பிரஸ்டன், மேரி டிரோசா, ஜெஹ் ஜான்சன், ஜேம்ஸ் கிராபோர்ட் ஆகிய 4 பேர் வகுத்து தந்துள்ளனர். தாக்குதல் வெளியே கசிந்து விடக்கூடாது என்பதற்காக அமெரிக்க அட்டர்னி ஜெனரலிடம் கூட கலந்தாலோசிக்கப்படவில்லை. தாக்குதலுக்கு முதல் நாள் தான் அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் பாகிஸ்தானுடன் போர் தொடுக்காத நிலையில் அவர்கள் நாட்டில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டது. பாகிஸ்தானிடம் அனுமதி வேண்டினால் அது சமரசம் செய்வது போலாகும் எனவும், பின்லேடன் தப்பிக்க கூடும் எனவும் வெள்ளை மாளிகை கருதியது. இறுதியில் இத்தாக்குதலை விதிவிலக்காக எடுத்துக்கொள்ளலாம் என வக்கீல்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த வக்கீல்கள் தான், பின்லேடனின் உடலை பெற்றுக்கொள்ள சவுதி அரேபியா மறுத்தால், பின்லேடனின் உடலை கடலில் புதைக்கும் ஐடியாவையும் கொடுத்துள்ளனர். உடலை பெற சவுதி மறுத்ததையடுத்த, உடல் கடலில் புதைக்கப்பட்டது.