Designed by Iniyas LTD
பொது பல சேனாவின் ஞானசார தேரரை கைது செய்ய உத்தரவு!
காணாமல் போகச் செய்யப்பட்ட பிரபல ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பிலான வழக்கின் போது பிரகீத்தின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை மன்றுக்குள் வைத்து திட்டித் தீர்த்து அச்சுறுத்திவிட்டு வெளியேறிச் சென்ற பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை நீதிமன்ற அவமதிப்பு குறித்த குற்றச் சாட்டில் கைது செய்யுமாறு நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஹோமாகம நீதிவான் நீதிமன்றின் நீதிபதி ரங்க திஸாநாயக்க இதற்கான உத்தரவை ஹோமாகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு நேற்று பிறப்பித்தார்.
பிரகீத் எக்னெலிகொட காணாமல் போகச் செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்று ஹோமாகம நீதிவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் நடைபெற்றது.
இதன் போது பாதிக்கப்பட்ட எக்னெலிகொட குடும்பத்தின் சார்பில் சந்தியா எக்னெலிகொடவும் மன்றுக்கு வருகை தந்திருந்தார். இதனை விட பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட பலர் இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இராணுவ புலனாய்வுப் பிரிவின் வீரர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக மன்றுக்கு வருகை தந்திருந்தனர்.
இந் நிலையில் திறந்த நீதிமன்றில் கலகொட அத்தே ஞானசார தேரர் சந்தியா எக்னெலிகொடவை மோசமாக திட்டித் தீர்த்துள்ளார். அத்துடன் அச்சுறுத்தியும் உள்ளார். பின்னர் அவர் மன்றிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளார். இந்த விடயத்தை உடனடியாகவே பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள் நீதிவான் ரங்க திஸாநாயக்கவின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இதனையடுத்து திறந்த மன்றில் நீதிமன்றை அவமதித்த குற்றச் சாட்டுக்காக ஞானசார தேரரை கைதுச் செய்யுமாறு ஹோமகம பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.
நேற்றைய வழக்கு விசாரணையின் போது இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளைச் செய்யும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணை அறிக்கையை மன்றில் முன் வைத்ததுடன் அரச தரப்பில் சிரேஷ்ட சட்டவாதி திலீப பீரிஸ் ஆஜராகியிருந்தார்.
இது தொடர்பிலான விசாரணைகளுக்கு இராணுவம் ஒத்துழைப்பு வழங்குவதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளதால் சிக்கல் இல்லை என தெரிவித்த நீதிவான் வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.