Designed by Iniyas LTD
மாணவர் போராட்டத்தை குழப்ப போலீஸ் சதி?
போராட்டத்தில் வன்முறையை பரப்பிய நச்சு சக்திகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார்.
பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.
அதைத் தொடர்ந்து தமிழகத்தில் நடக்கும் நிகழ்வுகள் மிகவும் வருத்தம் அளிக்கின்றன. தமிழர்களின் கலாசாரம் மற்றும் பண்பாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதல்களை கண்டித்தும், தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் தான் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
ஜல்லிக்கட்டு விஷயத்தில் முழுமையானத் தீர்வு ஏற்பட வேண்டும் என்பது தான் மாணவர்களின் எதிர்பார்ப்பாகும். அந்த எதிர்பார்ப்பில் எந்த தவறும் இல்லை.
ஆனால், அறவழியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்குடன் சில நச்சு சக்திகள் உள்ளே நுழைந்தன. அந்த சக்திகளால் தான் உன்னதமான போராட்டம் கட்டுப்பாட்டை இழந்து தவறான திசையில் பயணிக்கத் தொடங்கியது.
இதற்கு மாணவர்களை எந்த வகையிலும் பொறுப்பாக்கக் கூடாது; அதே நேரத்தில் திட்டமிட்டு வன்முறையை பரப்பிய நச்சு சக்திகளை அடையாளம் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் எனது நிலைப்பாடு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.