Designed by Iniyas LTD
முகமது ஹபீஸின் பந்துவீச்சு முறை குறித்து பரிசோதனை
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் முகமது ஹபீஸின் பந்துவீச்சு முறை குறித்து பரிசோதனை செய்யப்படவுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான முகமது ஹபீஸ் சுழற்பந்தும் வீசக்கூடியவர்.
கடந்த நவம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான தொடரின் போது பந்து வீசுகையில், அவரது முழங்கை விதிமுறைக்கு புறம்பாக 15 டிகிரி கோணத்திற்கு மேல் வளைவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் பந்து வீசுவதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தடை விதித்தது. ஆனாலும் ஒரு துடுப்பாட்ட வீரராக உலகக்கிண்ண அணியில் இடம்பிடித்த அவர் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அதிலும் விளையாட முடியவில்லை.
இதன் பின்னர் தாயகம் திரும்பிய ஹபீஸ் நிபுணர்களின் ஆலோசனைப்படி பந்து வீச்சு குறைபாடுகளை சரி செய்வதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் முகமது ஹபீஸ் எதிர்வரும் 9ம் திகதி சென்னை ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் பந்து வீச்சு முறை குறித்து பரிசோதனை செய்யப்படவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மலும் இதே போன்ற பிரச்சினையில் சிக்கிய போது சென்னையில் பந்து வீச்சு பரிசோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.