தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள் நீரியல்வளத் திணைக்களத்தினை முற்றுகை….

முல்லைத்தீவு மாவட்த்தில் உள்ள கடற்தொழிலாளர்களின் பிரச்சனைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டு  கள்ளப்பாடு பகுதியில் இன்று  24.07.18 செவ்வாய் கிழமை காலை நடைபெற்றது

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்தொழிலாளர்களின் கடல்வழம் அழிக்கப்படுவது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது மற்றும் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையினை தடைசெய்தல் தொடர்பிலான கலந்துரையாடல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டு இடம்பெற்றது

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்,கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளர்  அதிகாரிகள்,கடற்படையினர் வடமாகாணசபை உறுப்பினர்கள்,பொலீஸார் உள்ளிட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது

இருப்பினும் இன்றைய கலந்துரையாடலில் வடமாகாண விவசாய மீன்பிடி அமைச்சர் க சிவநேசன்  வடமாகாண சபை உறுப்பினர் து ரவிகரன் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் இ பிரதாபன் பொலிஸ் அதிகாரிகள் கடற்படையினர் கடற்றொழில் நீரியல் வள திணைக்கள உதவிப்பணிப்பாளர் சார்பாக அவரது பிரதிநிதிகள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் மீனவ மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

நிகழ்வில் மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் இடையில் பல மணி நேரமாக கலந்துரையாடல்கள் இடம்பெற்ற போதும் கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளர் கூட்டத்தில் கலந்துகொள்ளாத காரனத்தால் இதற்க்கான உறுதியான தீர்மானங்கள் எட்டப்பட முடியாது போக மக்கள் திணைக்களத்தில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை வைத்து இவர்கள் இன்று முடிவு எடுக்காவிட்டால் எமக்கு தீர்வு கிடைக்காது என கூறி கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தை முற்றுகையிடுவதாக கூறி கூட்டத்திலிருந்து கலைந்து சென்றனர்

இங்கிருந்து கலைந்து சென்ற வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் உள்ளிட்ட கடற்தொழில் அமைப்பினை சார்ந்தவர்கள் மற்றும் கடற்தொழிலாளர்கள் ஒன்றாக திரண்டு முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் திணைக்கள அலுவலகத்தினை முற்றுகையிட்டுள்ளார்கள்.

இவர்கள் அந்த பகுதிக்கு வரும்போது அந்தப்பகுதிக்கு வந்த பொலிசார் குறித்த திணைகள வாயிலை பூட்டி பாதுகாப்பு வழங்கினர் குறித்த பகுதிக்கு வந்த மக்கள் அந்த இடத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

சுமார் ஒரு மணிநேரம் அலுவலகத்திற்கு முன்னாள் முற்றுகையிட்ட மக்கள் கடற்தொழில் திணைக்கள அதிகாரி வந்து தங்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இன்னிலையில் கடற்றொழில்  நீரியல்வளத்திணைக்கள அதிகாரி நீதிமன்றத்திற்கு சென்றிருந்த காரணத்தால் அதிகாரியினை வெளியில் வருமாறு மக்கள் குரல்கொடுத்துள்ளார்கள்.

குறித்த அதிகாரியின் ஊர்தி திணைக்களத்திற்குள் நின்ற காரணத்தால் மக்களை ஏமாற்றும் செயல் என ஆர்ப்பாட்டத்தில் நின்ற கடற்தொழிலாளர்கள் சத்தமிட்டுள்ளதை தொடர்ந்து பொலீஸார் திணைக்களத்திற்குள் சென்று அதிகாரி உள்ளாரா எனபார்த்தபோது அங்கு அதிகாரி இல்லை எனவே மக்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொடிருன்தனர்

இன்னிலையில் நீதிமன்றத்தில் இருந்து குறித்த அதிகாரி திணைக்களத்திற்கு வருகைதந்தபோது வசாலிலே மறித்த மக்கள் தங்கள் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்கள்.

ஆயிரத்திற்கும் அதிகமான கடற்தொழிலாளர்கள் கையெழுத்திட்ட மனுவினை வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் அவர்கள் கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அதிகாரியிடம் கையளித்துள்ளர்.

அந்த மனுவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்பரப்பில் சட்டவிரோத தொழில் நடவடிக்கை மிகமோசமாக நடைபெற்று வருகின்றது

இதுவிடயமாக பல தடவைகள் தெரியப்படுத்தியும் இன்று வரை தீர்வு கிடைக்கவில்லை கடற்தொழிலாளர்கள் வறுமையில் வாடுகின்றார்கள்.

எனவே வெளிச்சம் பாச்சிமீன்பிடிப்பது,வெடி வைத்து மீன்பிடித்தல்,லைலா வலை மீன்பிடித்தல்,சுருக்குவலைமூலம் மீன்பிடித்தல்,சங்கு பிடித்தல் அட்டைபிடித்தல்,போன்ற தொழில் நடவடிக்கையினை உடன் நிறுத்த வேண்டும் இதற்காக கொடுக்கப்பட்ட அனுமதிகளும் உடனடியாக இரத்து செய்யப்படவேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளர்  வி.கலிஸ்ரன் ..

முல்லைத்தீவு கடலில் லைட்பாவித்து மீன்பிடிக்கும் நடவடிக்கை அதிகளவில் இருந்துள்ளது இது தொடர்பில் நேற்றில் இருந்து 23.07.18 அதற்கான சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு படகுகள் கைதுசெய்யப்பட்டுள்ளது. அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளோம் அவர்களை எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது.

லைட்பாவித்து மீன்பிடிப்பவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம்

இதில் சுருக்குவலை காலை ஆறுமணிதொடக்கம் மாலை ஆறுமணிவரை தொழில் செய்யலாம் ஒன்றரை இஞ்சிக்கு மேல் உள்ள கண் அளவினை பாவித்து தொழில் செய்யலாம். அந்த நிபந்தனைக்கு அமையவே நாங்கள் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

அவர்கள் சட்டத்திற்கு முரணான வகையில் நடத்துகொண்டால் அவர்களின் அனுமதிகள் இரத்து செய்யப்படும்  என்றும் மக்களின் கோரிக்கைக்கு அமைய இந்த சட்டவிரோத தொழில்களை நிருத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம் என்றபோது மக்கள் குறுக்கிட்டு மழுப்பலான பதில் வேண்டாம் தங்களால் கூறப்பட்ட இவ்வாறான தொழில்களை தடைசெய்கிறோம் என உறுதிபட கூறுமாறு கூறி கூக்குரல் இட்டனர்.

அதனை தொடர்ந்து உங்களது கோரிக்கைக்கு அமைய இவற்றை தடை செய்கிறோம் என உறுதிபட தெரிவித்தார்.

அத்தோடு  இவ்வாறான சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையினை கட்டுப்படுத்த கடற்தொழில் மக்களின் ஒத்துளைப்புடனும் பொலிசார் கடற்படையினது உதவியுடனும்  இன்று தொடக்கம் அனைத்தும் கட்டுப்படுத்தப்படும் என்றார்

இதன்போது கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் அமைப்பின் தலைவர் ஜெயா அவர்கள்..

இன்று நடத்திய போராட்டத்தில் மீன்பிடி திணைக்களத்தினை முற்றுகையிட்டு எமது கோரிக்கையினை முன்வைத்துள்ளோம்.

சட்டவிரோத நடவடிக்கைககள் அனைத்தும் இன்றில் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் தடைசெய்யவேண்டும் என்று மக்கள் ஏகோபித்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்கள்.

சுருக்கு வலைக்கான அனுமதிகளை மீள பெற்றுக்கொள்ளல் என்றும் கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அதிகாரி வாக்குறுதிஅளித்துள்ளார்.

கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அதிகாரி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றா விட்டால் மக்கள் பாரியஅளவில் போராட்டத்தினை நடத்தி கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களத்தினை மூடும் நிலைப்பாட்டிற் கொண்டு வரும் நிலைப்பாட்டினை எடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...