Designed by Iniyas LTD
ரூ.251 க்கு ஸ்மார்ட் போன் கொடுக்காவிட்டால் நடவடிக்கை!
நவீனரக ஸ்மார்ட் போன்களை ரூ.251 விலையில் தருவதாக அறிவித்த ‘ரிங்கிங் பெல்ஸை’ அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. அந்நிறுவனம் அளித்த வாக்குறுதியின்படி ஏப்ரல் மாதத்தில் இருந்து டெலிவரி செய்யவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய தொலைதொடர்புத் துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா நகரைச் சேர்ந்த ‘ரிங்கிங் பெல்ஸ்’ என்ற செல்போன் நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது தயாரிப்பான ‘பிரீடம் 251’ என்னும் ஸ்மார்ட்போனை மிகக் குறைந்த விலைக்கு (ரூ.251) விற்பனை செய்வதாக அறிவித்தது. இதையடுத்து கடந்த 18 மற்றும் 19–ந்தேதிகளில் மட்டும் அந்த நிறுவனத்தின் இணையதளம் மூலம் 7 கோடிக்கும் அதிகமானோர் இந்த செல்போனை வாங்குவதற்கு முன்பதிவு செய்தனர்.
அதேநேரம், இவ்வளவு குறைந்த விலையில் ஸ்மார்ட்போனை விற்பனை செய்வது சாத்தியமல்ல என்று இதர செல்போன் நிறுவனங்கள் போர்க்கொடி உயர்த்தின. இதுதொடர்பாக மத்திய அரசு விசாரணை நடத்தவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, ரூ.251 விலையில் ‘ஸ்மார்ட்போன்’ தருவதாக அறிவித்த செல்போன் நிறுவனத்தில் வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனையும் நடத்தினர். இருப்பினும் ‘பிரீடம் 251’ தயாரிப்பில் ஒவ்வொரு மொபைலுக்கும் ரூ.31 லாபம் இருப்பதாக தயாரிப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ‘ரிங்கிங் பெல்ஸ்’ நிறுவனம் உறுதியளித்தப்படி டெலிவரி செய்யவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய தொலைத்தொடர்புத் துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், “‘ரிங்கிங் பெல்ஸ்’ நிறுவனத்தின் திட்டம் தொடர்பாக எழுப்பப்படும் சந்தேகங்கள் தொடர்பாக பரிசீலித்து வருகிறோம். சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.
அவர்கள் எப்படி தயார் செய்கிறார்கள்? என்பது தொடர்பாக விசாரித்துள்ளோம், அவர்களால் ரூ.251 விலையில் செல்போன் கொடுக்க முடியுமா?, பி.ஐ.எஸ். சான்றிதழ் பெற்றுள்ளார்களா? என்பதையும் விசாரித்துள்ளோம்,” என்று கூறி உள்ளார்.
எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொடர்புத் துறையின் சம்மனை அடுத்து ‘ரிங்கிங் பெல்ஸ்’ தலைவர் அசோக் சத்தா மற்றும் மோஹித் கோயல் ஆகியோர் தங்களுடைய தொழில் தொடர்பான செயல்திட்டத்தை கொடுத்து உள்ளனர். அவர்களுடைய பதிலை மத்திய தொலைத்தொடர்புத்துறை அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.
அவர்கள் (ரிங்கிங் பெல்ஸ்) அளித்த வாக்குறுதியின்படி, செல்போன்களை டெலிவரி செய்ய வேண்டும். அவர்கள் ஏப்ரல் மாதத்தில் இருந்து டெலிவரி செய்வதில் தோல்வி அடைந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று தெரிவித்துள்ளார்.