Designed by Iniyas LTD
வடகிழக்கில் இராணுவ ஆட்சி அதிகரிப்பு – மாவை சேனாதிராஜா
வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் இராணுவ ஆட்சியை நீடித்து அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதிலேயே அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குற்றம்சாட்டியுள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர், வடக்கு கிழக்கு மக்களின் காணிகளை அரசாங்கம் பலவந்தமாக பெற்றுக் கொள்கின்றது. இது ஓர் பாரதூரமான பிரச்சினையாகும். வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் இராணுவ ஆட்சியை நீடித்து வருகின்றது.
பெரும் எண்ணிக்கையிலான படையினர் தொடர்ந்தும் வடக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். பிரதேசத்தில் வாழ்ந்து வரும் மக்களுக்கு எவ்வித சுதந்திரமும் கிடையாது. அதிகாரத்தில் நீடிப்பதற்கு அரசாங்கம் பல்வேறு உபாயங்களை பின்பற்றி வருகின்றது. உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது.சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இலங்கைக்கு வருவதனை இந்தியா விரும்பவில்லை. எதிர்காலத்தில் இது பாரதூரமான பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடும் என மாவை சேனாதிராஜா நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.