Designed by Iniyas LTD
வடக்கு கிழக்கு இணைக்க கோருவது சட்டத்துக்கு அமைவானதே!
வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்குமாறு கோருவது அரசியலமைப்பிற்கு அமைவானது என்று கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட சிரேஷ்ட விரிவுரையாளர் அ.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது;
அண்மைக் காலங்களில் வடக்கு கிழக்கு இணைப்பு பற்றிய பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. தென்னிலங்கையைச் சேர்ந்த சில அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் வடக்கு கிழக்கு இணைப்பை மீள கோருவது அரசியலமைப்பிற்கு எதிரானது எனவும் வடக்கு கிழக்கை உயர்நீதிமன்றம் பிரித்து வைத்துள்ளதால் இம் மாகாணங்களை மீள இணைக்கக் கோருவது உயர்நீதிமன்றத்தை அவமதிப்பதாகும் எனவும் கருத்துத் தெரிவிக்கின்றார்கள்.
வடக்கு – கிழக்கை இணைக்குமாறு கோருவது எவ்வகையிலும் அரசியலமைப்பிற்கு எதிரானதாகவோ அல்லது உயர்நீதிமன்றத்தை அவமதிப்பதாகவோ ஆகாது. அரசியலமைப்பிற்கு கொண்டுவரப்பட்ட பதின்மூன்றாவது திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டதே மாகாணங்களை இணைப்பது என்பதாகும். பாராளுமன்றமானது சட்டத்தின் மூலம் அடுத்துள்ள இரண்டு அல்லது மூன்று மாகாணங்களை தனியொரு முதலமைச்சரைக் கொண்ட தனியொரு மாகாண சபையாக இணைக்கலாம் என்பதை பதின்மூன்றாவது திருத்தமானது அரசியலமைப்பில் நிரந்தரமானதாக சேர்த்துள்ளது.
வடக்கு கிழக்கு இணைப்பைப் பிரிக்கும் வகையில் உயர்நீதிமன்றத்தால் 2006 இல் வழங்கப்பட்ட தீர்ப்பானது வடக்கு கிழக்கு இணைப்புப் பற்றிய ஏற்பாடுகளைக் கொண்டிருந்த மாகாண சபைகள் சட்டத்திலுள்ள நிபந்தனைகளுக்கு மாறாக அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி வடக்கு கிழக்கு இணைப்பை நீடித்துச் சென்றமையானது அரசியலமைப்பிற்கு மாறானது என்பதாக மட்டுமே இருந்தது. வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பது அரசியலமைப்பிற்கு மாறானது என்பதாக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்திருக்கவில்லை.
அடுத்துள்ள மாகாணங்களை ஒரே மாகாணசபையாக இணைப்பது என்பது இன்னமும் அரசியலமைப்பின் பாகமாகவே இருந்து வருகின்றது. வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பாக பாராளுமன்றத்தின் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற வேண்டிய அவசியமோ அல்லது சர்வஜன வாக்கெடுப்பிற்குச் செல்ல வேண்டிய அவசியமோ இல்லை. பாராளுமன்றமானது சாதாரண பெரும்பான்மை மூலம் இருந்து வரும்
மாகாண சபைகள் சட்டத்தை திருத்துவதன் மூலம் அல்லது புதிதாக ஒரு சட்டத்தை ஆக்குவதன் மூலம் இதனைச் செய்யலாம்.