Designed by Iniyas LTD
வவுனியா ஆண்டியாபுளியங்குளம் மக்கள் இராணுவத்திற்கெதிராக ஆர்ப்பாட்டம்
வவுனியா செட்டிகுளம் பிரதேச செலயகத்திற்கு உட்பட்ட ஆண்டியாபுளியங்குளம் கிராமத்து காணிகளை இராணுவம் அபகரிப்பதாக தெரிவித்து அப்பகுதி மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா ஆண்டியாபுளியங்குளத்தில் விளையாட்டு மைதானம், ஆரம்ப பாடசாலை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்காக 12 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டன. எனினும் இராணுவம் அந்த நிலத்தை தமது நிலம் என உரிமை கோருவதாகவும் இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்ட காணி என பதாதைகளை அமைத்துள்ளதாகவும் குற்றம்சுமத்தியே மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் இக் காணி பிரதேச செயலாளரினால் மக்களின் தேவைக்காக ஒதுக்கப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். இந்நிலையில், முதற்கட்டமாக குறித்த காணிகளை துப்பரவு செய்து விளையாட்டு மைதானத்தை அமைப்பதற்கு கிராம மக்களால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது இராணுவத்தால் தடை விதிக்கப்பட்டதாகவும் இக்காணிகளுடன் சேர்த்து தற்போது விவசாயம் செய்து வரும் 160 ஏக்கர் வயல் நிலத்தையும் இராணுவ தேவைக்காக சுவீகரிகரித்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினார்.
இந் நிலையில் இன்று காணிகளை துப்பரவு செய்ய மக்களால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினர் இடையூறு விளைவித்தபோது அங்கு இராணுவ அதிகா ரிவருகை தந்து மக்களுடன் கலந்துரையாடியிருந்த போதிலும் சமரசம் ஏற்படாத நிலையில் தொடர்ந்தும் அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பொலிஸ் அதிகாரிகளும் சமரசம் செய்ய முயற்சித்தபோதிலும் அதுவும் பயனற்று ஆர்ப்பாட்டம் சுமார் இரண்டு மணி நேரம் இடம்பெற்றிருந்தது.
இந் நிலையில் எதிர்வரும் 8 ஆம் திகதிக்கு முன்னதாக தமக்கான காணியை ஒப்படைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தாம் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.