Designed by Iniyas LTD
500 போராளிகளுக்கும் 27 குழந்தைகளுக்கும் என்ன நடந்தது? சிவசக்தி ஆனந்தன் கேள்வி
இராணுவத்தால் கைது செய்யப்பட்ட 500க்கும் மேற்பட்ட போராளிகள் மற்றும் 27 குழந்தைகளுக்கு என்ன நடந்தது என வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பினார்.
முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இருந்து வட்டுவாகல் கடற்படை முகாம்வரை பேரணியாக சென்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இவ் பேரணியில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கருத்து தெரிவிக்கையில்,
இராணுவத்தால் கைது செய்யப்பட்ட 500 மேற்பட்ட போராளிகள் மற்றும் 27 குழந்தைகளுக்கு என்ன நடந்தது?
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கடந்த பத்து வருட காலமாக தங்கள் உறவுகளை தேடிக்கொண்டு பல போராட்டங்களை நடாத்திக்கொண்டு இருக்கின்றார்கள்.
உயிருடன் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டவர்கள் தற்போது உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா? என்ற பதிலை முன்னாள் ஆட்சியாளர்களும் சரி இந்நாள் ஆட்சியாளர்களும் சரி வழங்கவில்லை.
அரசாங்கத்தின் கொடூரத் தன்மையின் முக்கிய விடயமாக போராளிகளோடு கைது செய்யப்பட்ட 27 குழந்தைகளின் நிலை என்ன அவர்களுக்கு என்ன நடந்தது என அரசு கூற மறுப்பது ஏன் என்ற கேள்வியையும் அவர் இதன்போது முன்வைத்தார்.