Designed by Iniyas LTD
பிரான்சின் புறநகர் பகுதியான நெவர் நகரத்தில் உணர்வெளிச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025
தமிழீழ விடுதலைக்காகவும் தமிழர்களின் சுதந்திர வாழ்வுக்காகவும் தம்மை முழுமையாக அர்ப்பணித்து இறுதிவரை களமாடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழத் தேசியத் தலைவர் உட்பட மாவீரர்கள் அனைவரையும் ஒருசேர நினைவேந்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27 அன்று பிரான்சின் புறநகர் பகுதியான நெவர் நகரத்தில் மிகுந்த உணர்வெளிச்சியுடன் நடைபெற்றது.
நிகழ்வின் பொதுச்சுடரினை நெவர் மறை மாவட்ட துணை ஆயர் பிரான்சுவா சவேரியர் (François Xavier) ஏற்றிவைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பிரான்ஸ் நாட்டின் தேசியக் கொடியை நெவர் மாவட்டத்தின் துணை மேயர் மார்ட்டின் மசோயர் (Martine Mazoyer) ஏற்றிவைத்தார். தமிழீழத் தேசியக் கொடியை திரு விஜி அவர்கள் ஏற்றிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் 2008 மாவீரர் நாள் உரை தொகுப்பு இடம்பெற்றது. தொடர்ந்து பிரதான சுடரை இலங்கை இந்திய கூட்டுப்படையின் சதியால் கேணல். கிட்டு உட்பட 10 வேங்கைகளுடன் வங்கக்கடலில் காவியமான லெப்டினன். அமுதன் அவர்களின் சகோதரர் அலோசியஸ் பிறின்சன் அவர்கள் ஏற்ற,
சம நேரத்தில் தமிழீழத் தேசியத்தலைவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவருமான மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கான சுடருடன் ஏனைய மாவீரர்களுக்கான சுடர்களை மக்கள் அனைவரும் ஏற்றிவைக்க துயிலும் இல்லப் பாடல் ஒலிக்கவிடப்பட்டது.
அனைவரும் மனம் உருகி உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன. பேச்சு, நடனம்,கவிதை,பாடல் மற்றும் தமிழ்ச் சோலையில் கல்வி கற்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக பரிசளிப்பு என மிகவும் எழுச்சியாக இடம்பெற்றன.
அத்துடன், உறுதியுரை அனைவராலும் உச்சரிக்கப்பட்டு, இறுதியாக “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” பாடலைத் தொடர்ந்து “தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்” என்ற தாரக மந்திரத்தோடு நிகழ்வுகள் நிறைவுபெற்றன.
