Designed by Iniyas LTD
நாங்கள் பல தேர்தல் களத்தினை கண்டவர்கள் – பா.அரியநேத்திரன்
இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலாக இருந்தாலும் சரி, பொதுத்தேர்தலாக இருந்தாலும் சரி எதையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். தற்போது தேர்தல் தொடர்பான செய்திகள் பரவலாக பேசப்பட்டு வரும் இந்தக்காலகட்டத்தில் தேர்தல் தொடர்பாக கருத்துக் கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்,
இந்த நாட்டிலே எப்போது எந்தத்தேர்தல் நடைபெற்றாலும் அதனை எதிர்கொள்வதற்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினராகிய நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். எந்த நேரத்தில் எவ்வாறான முடிவினை எடுக்க வேண்டும் என்பதனை எமது தலைமை முடிவு எடுக்கும். அது தமிழ்மக்களை மையப்படுத்தியதாகவே அமையும்.
நாங்கள் பல தேர்தல் களத்தினை கண்டவர்கள் எமது மக்கள் எம்முடன் இன்று நேற்றல்ல பல தசாப்தங்களாக இருந்து அனைத்து தேர்தல்களிலும் எம்மை வெற்றி பெறச்செய்தவர்கள் என்பதுதான் வரலாறு. அதேபோன்று தான் இனிவரும் தேர்தல்கள் எதுவாக இருந்தாலும் அதிலும் எம்மக்கள் எம்முடன் இருந்து செயற்பட்டு எமது கட்சியை வெற்றி பெறச்செய்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் எமக்கில்லை.
அரசாங்கம் எந்தளவிற்காவது தமிழர்களது பலத்தினை குறைக்க வேண்டும் என்பதற்காக கோடிக்கணக்கில் பணத்தினை அள்ளி கொட்டி தமிழர்கள் என்று கூறிக்கொண்டு அரசாங்கத்துடன் தங்களது சுகபோகத்திற்காக இருப்பவர்களை களத்தில் இறக்கி, எமது தமிழ் மக்களின் வாக்குகளை சூரையாட நினைப்பதுதான் காலாகாலமாக நடந்து வரும் செயற்பாடாகும்.
அந்த வகையிலே தான் தேர்தலை இலக்கு வைத்து வட, கிழக்கில் பலர் இறக்கப்பட்டிருக்கின்றார்கள். அந்த வகையிலே மட்டக்களப்பிலே அமைப்பாளர்கள் என்றும், அமைச்சர்கள் என்றும் பலர் மக்களின் வரிப்பணத்தினைக்கொண்டு வந்து பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள்.
எமது மக்கள் வெறுமனே நீண்டு நிலைக்காத அபிவிருத்திக்காக ஆசைப்பட்டவர்கள் அல்ல. மாறாக அனைத்து உரிமைகளுடனும் கூடிய நிரந்தர அபிவிருத்தியை எதிர்பார்த்து ஏங்கி நிற்பவர்கள். அவர்களுக்கான நிரந்தர இறுதித்தீர்வு கிடைக்கும் வரை எமது கட்சி அவர்களுக்காகவே களத்தில் நின்று போராடும்.
ஒவ்வொரு தமிழனும் தன்மானத்துடன் இந்த நாட்டிலே வாழ வேண்டும் அதற்காகத் தான் 65 வருடங்களாக பல தியாகங்களை செய்திருக்கின்றோம் அந்தத் தியாகங்களுக்கான தீர்வு தொலைவில் இல்லை. நிச்சயமாக எமது விடுதலைப்பயணம் தற்போது சர்வதேச மயப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த சூழலில் தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எடுக்கும் முடிவுக்குப் பின்னால் அனைத்து தமிழர்களும் அணிதிரள வேண்டும்.
இவர்களது வேலைத்திட்டங்களுக்கு விலை போகாதவர்களாகவும் தமது இனத்தின் விடுதலையினை என்றும் மதித்து செயற்பட்டவர்களாகவும் எமது தமிழ் இனம் தொடர்ந்து இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.