Designed by Iniyas LTD
சசி பெருமாள் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன: வைகோ
சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சசிபெருமாள் மரணம் தற்கொலை அல்ல என்பதற்கான ஆதாரம் தம்மிடம் இருக்கின்றது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வழக்கில் அரசு முதன்மை செயலாளர் ஜிதேந்திரநாத் ஸ்வைன் தாக்கல் செய்த பதில் மனுவில், சசி பெருமாள் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் தம்மையும் மனுதாரராக இணைத்து கொள்ளக் கோரி வைகோ தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இதனையடுத்து வைகோ தாக்கல் செய்துள்ள மனுவில், செல்போன் டவரில் ஏறிய சசிபெருமாளை கீழே இறக்குவதற்கு தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் முயன்ற போது, நைலான் கயிறு நழுவி, கழுத்து மற்றும் தொண்டை இறுகி சசிபெருமாள் இறந்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கான ஆதாரம் தம்மிடம் உள்ளதாகவும் வைகோ அதில் குறிப்பிட்டுள்ளார். எனவே சசிபெருமாள் மகன் விவேக் கேட்டுக் கொண்டதைப் போல, பதவியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து, இந்த மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதால், வழக்கு விசாரணையை வரும் 25ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.