Designed by Iniyas LTD
பரணகம ஆணைக்குழு அறிக்கைக்கு எதிராக ஐ.நாவில் முறைப்பாடு
இலங்கையில் காணாமல் போதல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக முன்னாள் நீதிவான் மெக்ஸ்வல் பரணகம தலைமையில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அமைப்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் அமைப்பாளரும், பச்சைத்தமிழகம் அமைப்பின் உறுப்பினருமான எஸ்.பி. உதயகுமாரினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மெக்ஸ்வல் பரணகம அறிக்கை உண்மைத் தன்மையையும் நீதியையும் நிலைநாட்டத் தவறியுள்ளதாக, ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் உதயகுமார் முறைப்பாடு செய்துள்ளார்.
இலங்கையில் தமிழ் சிறுபான்மையினர் இனச் சுத்திகரிக்கப்பட்டமை குறித்த உண்மைகளை மூடி மறைக்கும் வகையில் இந்த அறிக்கை அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை தவிர்க்கும் வகையிலும் மெக்ஸ்வல் பரணகம அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.