Designed by Iniyas LTD
அரசியல் கைதிகள் சாகும் வரை பட்டினிப்போராட்டம்!
விசாரணைகளின்றி நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள தம்மை விடுதலை செய்யக் கோரி அநுராதபுரம் சிறைச் சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சாகும் வரையி லான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.
அநுராதபுரம் சிறைச்சாலையில் எந்தவித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாமல் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதியிலிருந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்.கரவெட்டி வடக்கு கரணவாயைச் சேர்ந்த மதியரசன் சுலக்சன், நாவலப்பிட்டி மக்கும்பரவைச் சேர்ந்த கணேசன் சந்திரன் ஆகியேரே நேற்றுக்காலை முதல் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை மகஸின் சிறைச்சாலையின் ஜே பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரமசகாயம் உதயகுமார், சிவசுப்பிரமணியம் தில்லராஜ், நடேஸ் குகநாதன், மு.சிவநாதன், மா.நீதிநாதன், க.வேதநாயகம், ந.தர்மராஜா, சு.ஞானசீலன், தயாபரன், செல்லத்துரை கிருபானந்தன், தி.மனோகரன், யோசப் செபஸ்சியான், சுப்பிரமணியன் கபிலன், இராசதுரை திருவருள், இரவீந்திரன் மதனி ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை மகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
தமது விடுதலை குறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரையில் தாம் உண்ணாவிரப்போராட்டத்தைக் கைவிடப்போவதில்லையெனவும் நீண்டகாலமாக விசாரணைகளின்றி சிறைச்சாலைகளில் தங்கியிருந்து சொல்லெண்ணா துன்பங்களை அனுபவித்து வரும் நாம் விடுதலையை வலியுறுத்தி உயிரைத் துச்சமென மதித்தே இவ்வாறான போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக உறவினர்கள் ஊடாக அறிவித்துள்ளனர்.
இதேவேளை தமது விடுதலையை வலியுத்தியும் தாம் கைது செய்யப்பட்டமைக்கான காரணம் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் தமது போராட்டத்திற்கான காரணத்தையும் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர் உட்டப சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் அறிவித்துள்ளதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.