Designed by Iniyas LTD
இன்று வெல்லப்போவது யார்? இங்கிலாந்தா நியூசிலாந்தா?
ஆறாவது உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடப் போகும் முதலாவது அணி எது என்பதைத் தீர்மானிக்கும் நியூஸிலாந்துக்கும் முன்னாள் சம்பியன் இங்கிலாந்துக்கும் இடையிலான முதலாவது அரை இறுதி போட்டி டெல்லி ஃபெரோஸ் ஷா கொட்லா விளையாட்டரங்கில் இன்று இரவு 7 மணிக்கு மின்னொளியில் நடைபெறவுள்ளது. நடந்து முடிந்த சுப்பர் – 10
போட்டிகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் இதுவரை தோல்வி அடையாமல் இருக்கும் ஒரே ஒரு அணியான நியூஸிலாந்து இறுதி ஆட்டத்தில் விளையாடும் தகுதியைப் பெறும் என நம்பப்படுகின்றது. எனினும் எதிர்பாராத முடிவைத் தரவல்ல அணியாக இங்கிலாந்து தென்படுவதை மறுப்பதற்கில்லை. கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து, இம்முறை சுப்பர் – 10 குழு –2 இல் இந்தியா, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளை இலகுவாக வெற்றிகொண்டு அரை இறுதி வாய்ப்பை பெற்றது.
இவ்வணியில் மார்ட்டின் குப்டில், வில்லியம்ஸன், கொலின் முன்ரோ, கோரி அண்டர்சன், ரொஸ் டெய்லர், க்ரான்ட் எலியட், லூக் ரொன்ச்சி ஆகிய அதிரடி துடுப்பாட்ட வீரர்கள் இடம்பெறுவதுடன் இவர்களில் கோரி அண்டர்சன், கேன் வில்லியம்ஸன், க்ரான்ட் எலியட் ஆகியோர் சகலதுறை வீரர்களாவர். பந்துவீச்சில் அடம் மில்னே, மிச்செல் மெக்லநகான், மிச்செல் சென்ட்னர், இஷ் சோதி ஆகியோர் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள்.
அணித் தலைவர் ஒய்ன் மோர்கன், ஜேசன் ரோய், அடம் ஹேல்ஸ், ஜோ ரூட், ஜொஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், மொய்ன் அலி ஆகியோர் இங்கிலாந்தின் துடுப்பாட்ட வரிசைக்கு வலுசேர்க்கின்றனர்.
இவர்களில் மொய்ன் அலி, பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் சகலதுறை வீரர்களாகத் திகழ்கின்றனர். பந்துவீச்சில் க்றிஸ் ஜோர்டன், ஆதில் ராஷித், டேவிட் வில்லி, ரீஸ் டொப்லே ஆகியோர் பந்துவீச்சில் பிரதான பங்கு வகிக்கின்றனர்.
இரண்டு அணிகளும் சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் ஒன்றையொன்று 13 தடவைகள் சந்தித்துள்ளன. இங்கிலாந்து 8 – 4 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றது.
இந்த சுற்றுப்போட்டியில் மும்பையிலும் டெல்லியிலும் மாத்திரமே இங்கிலாந்து விளையாடியுள்ளது. ஆனால் நியூஸிலாந்து 4 இடங்களில் விளையாடியுள்ளதுடன் இப்போது டெல்லியில் அரையிறுதியை எதிர்கொள்ளவுள்ளது.
முதலாவது அரை இறுதிப் போட்டி நடைபெறும் டெல்லியில் இங்கிலாந்துக்கு அனுபவம் இருப்பதால் அவ்வணிக்கு சாதகமாக இருக்கும் என நியூஸிலாந்து அணித் தலைவர் வில்லியம்ஸன் கூறினார்.
ஆனால் இருபதுக்கு 20 போட்டிகளில் எதுவும் நிகழலாம் என கேன் வில்லியம்ஸன் கூறுகின்றார். இந்தப் போட்டி குறித்து இங்கிலாந்து அணித் தலைவர் மோர்கன் தெரிவிக்கையில், அணிக்கு தெரிவாகியுள்ள சகல வீரர்களும் தங்களால் ஆன அதிகபட்ச பங்களிப்பை வழங்கியுள்ளனர் என நான் கருதுகின்றேன். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் நிறைய விடயங்களைக் கற்றுக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் செலுத்திவந்துள்ளனர்.
கடந்த வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின்போது அவுஸ்திரேலியாவும் நியூஸிலாந்தும் வெளிப்படுத்திய ஆற்றல்களை விஞ்சும் வகையில் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என நாங்கள் திட்டமிட்டோம்.
அது கிட்டத்தட்ட கைகூடி யுள்ளது. எனவே இன்றைய போட்டியில் திறமையாக விளையாடி வெற்றி பெற முயற்சிப்போம் என்று மோர்கன் மேலும் தெரிவித்தார்.