இது தொடர்பில் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-ஐ.நா. மனித உரிமைகள் சபையின் உலக நீதி இரண்டு தரிசனங்கள் கண்டது. ஒன்று, மில்லியன் கையொப்பமிடல் போராட்டத்தின் ஊடாக 1.4 மில்லியன் மக்கள், இலங்கை குறித்து தீர்மானத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அமைக்கக் கோரினர்.
வடக்கு மாகாண சபை, தமிழக சட்ட சபை மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசின் நாடாளுமன்றம் ஆகியன நிறைவேற்றிய தீர்மானங்களில், இலங்கையின் இடம்பெற்றது போர்க்குற்றங்கள் அதாவது மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலையை விசாரணை செய்வதற்குச் சர்வதேசப் பொறிமுறை அமைக்கப்படவேண்டுமென வலியுறுத்தப்பட்டது.அத்துடன் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கையின் பொறுப்புக் கூறலில் உள்நாட்டுப் பொறிமுறை போதாது, சிறப்பு கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டுமெனப் பரிந்துரைத்தார்.
ஐ.நா மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் இலங்கை அரசுக்குச் சார்பான வகையில் அமைந்துள்ளது. நம்பகமான நீதிச் செயல்முறையில் சுயாதீன மற்றும் ஒருமைப்பாடு கொண்ட நீதித்துறையினரின் தலைமையில் உள்ள நீதிப்பொறிமுறை அமைக்கப்படவேண்டும். அதில் பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள், சட்டவாளர்கள், விசாரணையாளர்கள் மற்றும் புலனாய்வாளர்களை உள்ளடக்கிய விசேட சட்ட அலுவலகம் நிறுவப்பட்டு உள்ளடக்கப்படவேண்டும்
இலங்கையில் உள்ளக குற்றவியல் விசாரணை மற்றும் சட்ட நடைமுறை பக்கச் சார்பானதும் அரசியல் தலையீட்டுடன் கூடியதும் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமேயாகும். இலங்கைக்கும் ஐ. நா அமைப்புக்கும் இடையிலான இணக்கப்பாட்டின் அடிப்படையில் கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டியது அவசியமானது என்றுள்ளது.