காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி பர்கான் வானி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து கடந்த ஜூன் 10-ஆம் தேதி முதல் அங்கு வன்முறை வெடித்தது. இந்த வன்முறைக்கு இதுவரை 81 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, பதற்றத்தை தணிக்க ஜம்மு காஷ்மீரின் பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தற்போது பள்ளத்தாக்கு பகுதிகளில் படிபடியாக அமைதி திரும்ப தொடங்கி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பொருளாதரத்தில் சுற்றுலா வருவாய் முக்கிய பங்கு வகிக்கிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டதால் உணவு விடுதிகள், சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. ஜம்முவிற்கும் வரும் சுற்றுலா பயணிகளின் வருகையும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் கடந்த 84 நாட்களில் மட்டும் சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் சுற்றுலா வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக காஷ்மீர் மாநில சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.