மாலிநாட்டு இரவு விடுதி ஒன்றின் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

மாலி நாட்டின் தலைநகரான பமகோவில் ஒரு இரவு விடுதியின் மீது எந்திரத் துப்பாக்கியாலும் கையெறி குண்டுகளாலும் நடத்தப்பட்ட தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். லா தெரசெ என்ற பாரில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ஒரு பிரெஞ்சுக் குடிமகன் கொல்லப்பட்டார் . மாலியைச் சேர்ந்த இருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அருகில் இருந்த வீதியில் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஒருவரது காரின் மீது குண்டு வீசப்பட்டதில் அவர் கொல்லப்பட்டார். மேலும் ஒரு ஐரோப்பியர் மருத்துவமனையில் மரணமடைந்தார்.

தாக்குதல் நடத்தியவர்கள் “அல்லாஹு அக்பர்” என்று சத்தமிட்டதாக இந்தச் சம்பவங்களைப் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக மூத்த புலனாய்வுத் துறை அதிகாரி ஒருவர் ராய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

இது மிகக் கோழைத்தனமான தாக்குதல் என ஃப்ரான்ஸ் நாட்டு அதிபர் ஃப்ரான்ஸ்வா ஒல்லாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடந்த இடத்திற்கு உடனடியாக பிரெஞ்ச் படையினர் வந்துசேர்ந்தனர்.

மாலியின் தலைநகரில் வெளிநாட்டினர் வசிக்கும் பகுதியில் அமைந்திருக்கும் அந்த பாரில் கொல்லப்பட்டவர் பிரான்ஸ் நாட்டவர் என்பதை அவர்கள் உறுதிசெய்தனர். கொல்லப்பட்ட மாலி நாட்டுக்காரர்களில் ஒருவர் காவல் துறை அதிகாரி என்றும் மற்றொருவர் பாதுகாவலர் என்றும் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் நடந்த பிறகு, நான்கு பேர் ஒரு வாகனத்தில் ஏறி அங்கிருந்து புறப்பட்டதாகவும் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் தப்பியதாகவும் இதனைப் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதலில் மேலும் எட்டுப் பேர் காயமடைந்தனர். பல ஆண்டுகளாக இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கும் மாலி அரச படையினருக்கும் இடையே சண்டை நடந்துவருகிறது.

அல் – காய்தாவுடன் தொடர்புடைய போராளிகள் தென்பகுதியில் முன்னேறிவருவதைத் தடுக்க பிரெஞ்சு, ஆப்பிரிக்கப் படைகள் 2013 ஜனவரியில் தலையிட்டன.

வட பகுதியில் இருக்கும் எல்லா நகரங்களிலிருந்தும் இந்தப் படையினர் வெளியேற்றப்பட்டுவிட்டனர். இருந்தபோதும் துவாரெக் எனப்படும் நாடோடிக் குழுவினரும் வேறு சில இஸ்லாமியக் குழுக்களும் தீவிரமாக இயங்கிவருகின்றன.

மோதல்கள் நடக்கும் வடபகுதியில், துவாரெக் கூட்டணியினருடன் அரசு ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தை பிப்ரவரி மாதத்தில் செய்துகொண்டது.

1960ஆம் ஆண்டில் பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து மாலி விடுதலை பெற்றது. அப்போதிலிருந்தே தங்களுக்குக் கூடுதல் அதிகாரம் கோரி துவாரெக் கலகப் படையினர் வட பகுதியில் மோதல்களை நடத்திவருகின்றனர்.

சஹாரா பாலைவனத்தின் பல பகுதிகளில் சுதந்திரமாகச் சுற்றிவரும் ஜிஹாதிக் குழுக்கள் தலையெடுத்த பிறகு இந்த மோதல் மிகச் சிக்கலானதாக மாறிவருகிறது.

இரவுஎந்திரகாயம்குண்டுகையெறிதலைநகரம்தாக்குதல்துப்பாக்கிநாடுபமகோபலிமாலிவிடுதி
Comments (0)
Add Comment