அமெரிக்கா வருபவர்களுக்கு குடியுரிமை வழங்கும் விஷயத்தை எளிமைப் படுத்த வேண்டும் என ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் கருத்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிட ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் பிரச்சாரம் செய்து வருகிறார்.
நியூயார்க்கில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஹிலாரி, அமெரிக்காவில் குடியேற வரும் அயல் நாட்டினர் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளைத் தளர்த்தவேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் மொழி, இனம், குடியுரிமை போன்ற காரணங்களுக்கு அப்பாற்பட்டு உலகம் முழுவதும் இருந்து வந்த மக்களால் அமெரிக்கா கட்டமைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
லத்தீன் அமெரிக்கர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அவர் இவ்வாறு பேசியது, அமெரிக்காவில் அதிகரிக்கும் லத்தீன் அமெரிக்கர்களின் வாக்குகளைக் கவரும் நோக்கில் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்துதெரிவித்துள்ளனர்.