அமெரிக்காவின் பர்லிங்டன் நகரில் உள்ள வணிக வளாகத்தில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள பர்லிங்டன் நகரில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள கேஸ்கேட் வணிக வளாகத்தில் மர்ம ஆள் ஒருவர் திடீரெனத் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டார்.
இதில் 3பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 2பேர் படுகாயம் அடைந்தனர். காவல்துறையினர் விரைந்து வருவதற்குள் துப்பாக்கியால் சுட்டவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். அவர் அருகிலுள்ள கட்டடங்களில் பதுங்கியிருக்கலாம் எனக் கருதிக் காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர் யார்? அதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருவதாகக் காவல்துறைச் செய்தித்தொடர்பாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.