அமெரிக்கா விமானத்தை இடைமறித்து ரஷ்ய விமானம் உளவு பார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை பால்டிக் கடலின் மேல் அமெரிக்க விமானப்படை விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது.
அப்போது ரஷ்யாவின் எஸ்யு 27 போர்ப்படை விமானம் அமெரிக்கா விமானத்தின் இறக்கையை ஒட்டி 50 அடி தூரத்தில் பாதுகாப்பற்ற முறையில் பறந்தது. இதனால் இருநாடுகள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐரோப்பிய கமாண்டன்ட் அதிகாரி டேனி ஹெர்னான்டஸ் கூறுகையில், அமெரிக்க விமானத்தை ரஷ்யாவின் எஸ்யு 27 ரக விமானம் இடைமறித்தது நேர்மையற்ற செயல். இதுபோல் ரஷ்ய எல்லைக்குள் அமெரிக்க விமானம் ஒருபோதும் நுழைந்ததில்லை. இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்கா தனது கண்டனத்தை ரஷ்யாவுக்கு தெரிவிக்கிறது என்றார்.
சமீபகாலமாக ரஷ்ய ராணுவ விமானமும் அமெரிக்கா போர் விமானமும் அருகருகே செல்லும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்காவின் கடற்படை விமானங்களை ரஷ்யாவின் டியு-142 விமானங்கள் பசிபிக் கடல் பகுதியில் இடைமறித்தது குறிப்பிடத்தக்கது.