அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை உளவு பார்த்த நபர் கையும் மெய்யுமாக சிக்கிய சம்பவத்தால் ஆளும் கட்சிக்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, அமைச்சர் மைத்திரிபால சிறிசேனாவை உளவு பார்ப்பதற்காக, அவரின் மெய்ப்பாதுகாப்பு வட்டாரத்திற்குள் ஒருவரை நியமித்துள்ளார்.
குறித்த நபர், அமைச்சரின் மெய்ப்பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய காலத்தில் அமைச்சர் தொடர்பான சகல தகவல்களையும் ஒவ்வொரு நாளும் கோத்தபாயவிடம் தெரிவித்து வந்துள்ளார். பண்டார என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கோத்தபாயவினால் உளவு பார்ப்பதற்காக நியமிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகிறது. இதற்காக அந்த நபரிற்கு சம்பளமாக 50000 வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த நபர் அமைச்சரினால் பிடிக்கப்பட்டதும் எல்லா உண்மைகளையும் கக்கியுள்ளார். இதனையடுத்து, ஆளும் கட்சியின் ஏனைய அமைச்சர்கள் மத்தியில் தமது பாதுகாப்பு பிரிவினர் குறித்து மாத்திரமல்லாமல் பணியாளர்கள் குறித்து அச்சம் தோன்றியுள்ளதாக சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களும் யார் உளவு வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதனை தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.