அரசாங்கத்திற்கு தேவையான வகையில் ஊடகங்கள் இயங்கி வருவதாக ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
பொருட்களின் விலையை குறைக்க முடியாது என அரசாங்கம் குறிப்பிடுகின்றது. எனினும் ஜே.வி.பி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டால் பொருட்களின் விலைகளை குறைக்க முடியும்.
இந்த நாட்டின் அனைத்து ஊடகங்களும் அரசாங்கத்திற்கு தேவையான வகையில் செயற்படுகின்றன. அனைத்து ஊடக நிறுவனங்களுடனும் அரசாங்கம் ஏதாவது ஒரு வகையில் தொடர்புகளைப் பேணி வருகின்றது.இதனால் சரியான தகவல்களை மக்களினால் அறிந்து கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் முடக்கப்பட்டுள்ளது. ஊடக நிறுவனங்களை விலைக்கு வாங்க இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. சில ஊடகங்கள் இந்த அரசாங்கத்திற்காக பிரச்சாரம் செய்து வருகின்றது என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த அரசாங்கத்தின் பெரும்பான்மையானவர்கள் ஊழல்மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இதனை பயன்படுத்தி தென் மற்றும் மேல்ம மாகாணசபைத் தேர்தல்களை வெற்றிகொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.இலங்கையில் மிக விசித்திரமான இராஜதந்திர சேவை காணப்படுகின்றது. கடமையாற்றி வரும் 64 தூதுவர்களில் 42 பேர் அரசியல்வாதிகளின் உறவினர்களாவர்.
இவர்களுக்கு நாட்டை பற்றி சொல்லத் தெரியாது, போதியளவு இராஜதந்திர அறிவு கிடையாது. இதனால் நாடு பாரியளவில் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.