பதான்கோட் தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் மசூத் அசார் மீது தடைவிதிக்கும் இந்தியாவின் முயற்சிக்கு சீனா மீண்டும் முட்டுக்கட்டை போடுகிறது.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் கடந்த ஜனவரி மாதம் 2-ந்தேதி இரவு பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ-முகமது இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் 6 பேர் ஏராளமான ஆயுதங்களுடன் புகுந்தனர். விமானப்படை தளத்தில் பதுங்கிக்கொண்டே 3 நாட்கள் அவர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகளுடன் சண்டையிட்ட ராணுவ வீரர்களில் 7 பேர் வீரமரணம் அடைந்தனர்.
80 மணி நேர சண்டைக்கு பின்பு 6 தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் பயன்படுத்திய செல்போன்கள் கைப்பற்றப்பட்டு அவற்றின் உரையாடல்கள் ஆய்வு செய்யப்பட்டபோது அவர்கள் அனைவரும் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ-முகமது இயக்கத்தினர் என்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட, அந்த இயக்கத்தின் தலைவர் மசூத் அசார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்திய அரசு கோரிக்கை விடுத்தது.
மேலும், மசூத் அசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்தியா ஐ.நாவிற்கு கடிதம் எழுதியது. அதில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளின் பல்வேறு நடவடிக்கைகளுக்கான ஆதாரங்களையும் அதில் இணைத்திருந்தது. ஆனால், இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் தரப்பு ஆலோசனையை கேட்க வேண்டும் என்று சீனா தரப்பில் ஐக்க்கிய நாடுகள் குழுவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.