இந்தியரான கிர்பால் சிங் (வயது 50), கடந்த 1992-ம் ஆண்டு வாகா எல்லையை கடந்து பாகிஸ்தானுக்கு சென்றபோது, கைது செய்யப்பட்டார். அவர் உளவு வேலையில் ஈடுபட சென்றதாக பாகிஸ்தான் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதற்கிடையே அவர் மீது தொடர் குண்டுவெடிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது.
பின்னர் ஐகோர்ட்டு அந்த தண்டனையை ரத்து செய்து, அவரை விடுதலை செய்தது. ஆனாலும் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படவில்லை. இதற்கு காரணமும் குறிப்பிடப்படவில்லை. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக அவர் லாகூரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) அதிகாலையில் அவர் மர்மமான முறையில் லாகூர் மத்திய சிறையில் இறந்து கிடந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக் காக லாகூர் ஜின்னா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கிர்பால் சிங்கின் மரணம் தொடர்பாக சக கைதிகளின் வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக அங்கு ஒரு மாஜிஸ்திரேட்டு வரவழைக்கப்பட்டார். லாகூர் மத்திய சிறை அதிகாரியிடம், “சிறையில் நடந்த சித்ரவதையில் கிர்பால்சிங் உயிரிழந்தாரா?” என கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அவர், “கிர்பால் சிங் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதாகவும், அடுத்த சில நிமிடங்களில் உயிரிழந்து விட்டதாகவும் சக கைதிகள் தெரிவித்தனர்” என்றார்.