இரு ஜனாதிபதிகள் இருக்க முடியாது :அதிபர் சிறிசேன காட்டம்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மீள் பரிசீலனை செய்யுமாறு உத்தரவிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டில் இரு ஜனாதிபதிகள் இருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார் என்றும் தெரியவருகின்றது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது:-

கடந்த புதன் கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை சந்திப்பின்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது ஜனாதிபதி கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

இலங்கையில் இரு ஜனாதிபதிகள் இருக்கமுடியாது. அவ்வாறான செயற்பாடுகள் முடிவிற்கு கொண்டுவரப்படவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி குடும்பத்தினருடன் தங்கியுள்ள பாசிக்குடா சுற்றுலாவிடுதியை சுற்றி முப்படையினர் தீவிரபாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை தொடர்பாகவே சிறிசேன இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

தற்போது வெறுமனே நாடாளுமன்ற உறுப்பினராக மாத்திரமுள்ள ராஜபக்சவுக்கு ஏன் இத்தனை பாதுகாப்பு என்பது தனக்கு புரியவில்லை என சிறிசேன தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச தற்போது தனது பாதுகாப்புக்கு 240 பேரை பயன்படுத்துகின்றார். எனது பதவிக்காலம் முடிவடைந்ததும் நான் உத்தியோக பூர்வ பங்களாக்களை தேடி செல்ல மாட்டேன், பொலனறுவையில் உள்ள எனது வீட்டிற்கு சென்று விடுவேன் எனவும் ஜனாதிபதி அங்கு தெரிவித்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது.

அமைச்சரவைஇலங்கைகடும் விமர்சனங்கள்பாதுகாப்பு ஏற்பாடுகள்மகிந்த ராஜபக்சமீள் பரிசீலனைமைத்திரிபால சிறிசேன
Comments (0)
Add Comment