அப்போது இந்தியாவை எதிர்த்தும், பாகிஸ்தானை ஆதரித்தும் மாணவர்கள் கோஷமிட்டனர்.
இது குறித்து அகில பாரதீய வித்தியார்த்தி அமைப்பினர் அளித்த புகாரின் பேரில் பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் கன்கய்யா குமார் உள்பட 7 மாணவர்களை டெல்லி போலீசார் கைது செய்தனர். அவர்கள் 7 பேரும் தேசத் துரோக குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாணவர்கள் அனைவரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி ஹபீஸ் சயீது உத்தரவின் போரில் செயல்படுவதாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் குற்றஞ்சாட்டி உள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கைதான 7 மாணவர்களையும் விடுதலை செய்ய காங்கிரஸ், இடது சாரிகள் வலியுறுத்தியுள்ளன. ஆனால் அதை மத்திய அரசு ஏற்கவில்லை.
இதைத் தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) டெல்லி ஜவகர்லால் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். வகுப்புகளை புறக்கணித்து அவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதனால் டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் கைது விவகாரம் விசுவரூபம் எடுக்கத் தொடங்கி உள்ளது. பா.ஜ.க. அரசுக்கு எதிராக இந்த மாணவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.