இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரே இரவில் சுவரொட்டிகளை ஒட்டிப் பரபரப்பை ஏற்படுத்தியது, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து பிரிந்த அதிருப்தி அணியினரே என்றும், அவர்கள் முதல் முன்னணி என்ற பெயரில் இயங்கவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய உறுப்பினர் ஒருவர் இந்த கட்சியின் முக்கிய பதவியை ஏற்கவுள்ளார்.
இதனையடுத்து பெருந்தொகை உறுப்பினர்கள் அவருடன் இணையவுள்ளனர். இந்தக் குழுவினர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும் அண்மையில் சந்தித்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் அசல ஜாகொட மற்றும் முன்னாள் ஜே வி பி நாடாளுமன்ற உறுப்பினர் நந்தன குணதிலக்க ஆகியோர் இந்த முன்னணியில் பிரதான இடத்தை வகிக்கின்றனர்.
இந்த முன்னணி எதிர்காலத்திலும் இரகசியமாகவே இயங்கவுள்ளது. பிரதான கட்சிகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட உறுப்பினர்களும் முன்னிலை சோஷலிஸ கட்சியின் உறுப்பினர்களும் இதில் இணையவுள்ளனர். கட்சியை தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யவும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகவும் முதல் முன்னணி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை இந்த முன்னணி ஆதரிக்கவுள்ளது என்று விடயம் வெளியாகவில்லை.