தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் சிறீலங்கா ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் பாதிப்பு ஏற்படாது என்று காணாமல் போனோர் தொடர்பான சிறீலங்கா ஜனாதிபதியின் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
காணாமல் போனோர் தொடர்பான சிறீலங்கா ஜனாதிபதியின் ஆணைக்குழுவின் விசாரணைகளில் நம்பிக்கை இல்லை என்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஆணைக்குழு விசாரணையில் ஈடுபட்டிருந்த சமகாலத்தில் மற்றுமொரு குழு மரணச் சான்றிதழ்களை வழங்கி இருந்தமை போன்ற விடயங்களை முன்வைத்து குறித்த ஆணைக்குழுவை நிராகரிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.
இது தொடர்பில் காணாமல் போனோர் தொடர்பான சிறீலங்கா ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம கருத்து வெளியிடுகையில்,
கிளிநொச்சியில் மரண சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என்று கூறினார்.
எவ்வாறாயினும் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை செய்யவே இந்த ஆணைக்குழுவை ஜனாதிபதி நியமித்திருக்கிறார்.
இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் அது கலைக்கப்பட போவதுமில்லை அதன் பணிகள் இடைநிறுத்தப்படுவதுமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.