சங்கிரிலா ஹோட்டல் நிறுவனம் அரசுக்குச் செலுத்திய பெருந்தொகைப் பணத்தை சுருட்டிக் கொள்ளும் முயற்சியில் கோத்தபாய ராஜபக்ஷ ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவின் பிரபல ஹோட்டல் நிறுவனமான சங்கிரிலா நிறுவனத்துக்கு கொழும்பு, காலிமுகத்திடல் நிலத்தின் ஒரு பகுதி விற்பனை செய்யப்பட்டது. இதற்கான தரகராக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஈடுபட்டிருந்தார். நிலத்தின் மதிப்பை விட பன்மடங்கு குறைவான விலையில் இந்த நிலம் விற்கப்பட்ட விவகாரத்தில், கோத்தபாய உள்ளிட்ட ஜனாதிபதியின் குடும்பத்தினர் தலா 400 மில்லியன் ரூபாக்களை கமிஷனாக பெற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் ஹோட்டல் நிறுவனம் அரசுக்குச் செலுத்திய 160 கோடி ரூபாவும் இதுவரை அரச திறைசேரியில் செலுத்தப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பணம் பாதுகாப்பு அமைச்சின் ஊடாகவே செலுத்தப்பட்டிருந்தது. இந்தக் கொடுக்கல் வாங்கல் முடிந்து வருடங்களும் கடந்து விட்டது. தற்போது இந்தப் பணம் பாதுகாப்பு அமைச்சின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இது அரச தாபன விதிகள் மற்றும் சட்டக்கோவையின் 148 விதிகளின் கீழ் கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும். எனினும் ஜனாதிபதி இதனைக் கண்டுகொள்ளாமல் மௌனமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹோட்டல் நிறுவனத்தினால் செலுத்தப்பட்ட பணத்தையும் கோத்தபாயவே சுருட்டிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தற்போது பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.