சிரியாவில் சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்து உள்ளது. இருந்த போதிலும் அங்கு இன்னும் வெடிகுண்டுகள் வெடிக்கும் சத்தமும், துப்பாக்கிச் சூடு சத்தமும் ஓய்ந்தபாடில்லை.
ஏனெனில் சிரியாவின் முக்கிய நகரங்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கமும், அல்–கொய்தாவின் இணை இயக்கமான நுஸ்ரா முன்னணி இயக்கமும் தங்களது தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன. மற்றொருபுறம் தீவிரவாதிகளை முற்றிலுமாக ஒழிக்க சிரிய ராணுவம் தீவிர நடவடிக்கையை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வடகிழக்கு பகுதியில் உள்ள ஹமா மாகாணத்துக்கு உட்பட்ட முக்கிய நகரங்களில் நுஸ்ரா முன்னணி இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் பலர் பயங்கர ஆயுதங்களுடன் நுழைய முயற்சி செய்தனர்.
ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிரிய ராணுவத்தினர் தீரமாக செயல்பட்டு அவர்களது முயற்சியை முறியடித்தனர். ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதலில் தீவிரவாதிகள் 70 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் அவர்களது ஆயுதம் தாங்கிய வாகனங்களும் கூண்டோடு அழிக்கப்பட்டன.