இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து கரிசனை கொண்டுள்ள சர்வதேச நாடுகள் நடைபெறவுள்ள சர்வதேச விசாரணையை உன்னிப்பாக அவதானிக்கவுள்ளதாக ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளரின் இனப்படுகொலையை தடுப்பது தொடர்பான விசேட ஆலோசகர் அடமாடயிங் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் 31 ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றிய அவர் “போர் பாதிப்புக்களில் இருந்து மீளெழும் முக்கியமான சந்தர்ப்பம் இப்போது இலங்கைக்கு கிட்டியுள்ளது.எனக் கூறினார். இதேசமயம் போருடன் தொடர்புடைய அனைத்து சம்பவங்களையும் உண்மை – நம்பகத் தன்மையுடன் இலங்கை அரசாங்கம் விசாரிக்க வேண்டும் என ஐ.நா. விரும்புகிறது என அதன் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் போரின் இறுதிக் கட்டத்தில் என்ன நடந்தது என்பதை அறிய எடுக்கும் முயற்சிகளை நியூயோர்க்கில் உள்ள ஐ.நா.வின் தலைமையகம் தினமும் ஊக்குவித்து வருகின்றது.
நல்லது மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் விசாரணைகள் தொடர்பில் எடுக்கும் முயற்சிகளை பார்த்தும் பேசியும் வருகிறேன். போரின் இறுதியில் தமிழர்களுக்கு நேர்ந்தவை குறித்து அறிய எடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஊக்கமளிக்க வேண்டும். அத்துடன் அதன் உண்மை – நம்பகத் தன்மை குறித்து இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தமும் கொடுக்க வேண்டும்.எனக் கூறினார். இதனிடையே அடமா டீயிங் கூறுகையில் பல சமயங்களில் உலகளாவிய ரீதியில் ஏற்படும் மோதல்கள் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்களை அலட்சியப்படுத்தி – திட்டமிட்ட நிகழ்வுகளாக ஏற்படுத்தப்படுகின்றன என்பதில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
சர்வதேச சமூகம் 1949 இல் ஏற்படுத்தப்பட்ட ஜெனீவா உடன்படிக்கையில் கூறப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதில் சர்வதேச சமூகம் துரோகம் இழைத்துள்ளது. மனித உயிர்கள் அதன் மதிப்பை இழந்து விட்டனவாக நான் உணர்கிறேன். சர்வதேசம் ஆயுதமற்ற வழிகளை கண்டுபிடிக்க வேண்டும். பொதுவாக உலகம் முழுவதும் பொதுமக்களுக்கு எதிரான வன்முறைகளைப் பார்க்கும்போது, ஆப்கானிஸ்தான், யேமன் நாடுகளில் மருத்துவ வளங்கள் குறி வைக்கப்படுகின்றன. மத்திய ஆபிரிக்கக் குடியரசில் சிறுவர்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர். சமயம் அல்லது சமூகத்துக்காக அவர்கள் வாள்களால் வெட்டிக் கொல்லப்படுகின்றனர். ஐ.நா. அமைதிப் படையினர் கூட பாலியல் வன்புணர்வுகளில் ஈடுபடுகின்றனர் என்றார்.