புத்தளம் கற்பிட்டி கடற்படை முகாமில் நேற்று நள்ளிரவு சட்டவிரோதமான வாக்குப்பெட்டிகள் தயார் செய்யப்பட்டு அதில் மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்கப்பட்ட வாக்குச்சீட்டுகள் நிரப்பப்பட்டதாக தெரியவருகிறது.
இதற்காக கொழும்பில் இருந்த வைஸ் அட்மிரல் பண்டார தலைமையில் குழுவொன்று கற்பிட்டி கடற்படை முகாமுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
கடற்படை முகாமில் தனியான இடம் ஒன்றை ஒதுக்கி இந்த சட்டவிரோத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்தல் வெற்றியை தட்டிப்பறிக்க இவ்வாறு வாக்குப் பெட்டிகள் நிரப்பப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்துகமபிரதேசத்தில் 150 போலிவாக்குகள்பிடிபட்டன
மத்துகம, நராவல பாலர் பாடசாலை வாக்களிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படும் 150 போலி வாக்குகளுடன் கெப் வண்டி சாரதியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கெப் வண்டிக்குள் இருந்த மூன்று நபர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதிதேர்தலிற்காக 71,000 பொலிஸ்பாதுகாப்பு
இன்று ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்புகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 71,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அவற்றோடு விசேட பாதுகாப்பு படை குழுவினரும் ஈடுபடுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அதேநேரம் நாடு முழுவதும் 420 வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், 2884 காவற்துறை நடமாடும் சேவைகள் நடத்தப்படுகின்றன.
தேர்தலை பாதுகாப்பாக நடத்துவதற்கு காவற்துறையினர் அர்ப்பணிப்புடன் செயற்படவிருப்பதாகவும் வாக்களிப்பின் போது வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்காக அதியுச்ச பலத்தை பயன்படுத்த காவற்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வாக்களித்து நிறைவு செய்ததன் பின்னர், வாக்கு சாவடிக்கு அருகில் அநாவசியமாக நிற்க வேண்டாம் என்றும் வாக்காளர்களிடம் வேண்டுக்கொள் முன்வைக்கப்பட்டுள்ளது.