நிபுணர் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்த்தப்பட உள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.காணாமல் போனவர்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் எண்ணிக்கை ஆறாக உயர்த்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். பிரித்தானிய சட்ட வல்லுனர் டெஸ்மன் டி சில்வா தலைமையில் மூவர் அடங்கிய நிபுணர் குழுவொன்றினை ஜனாதிபதி ஏற்கனவே நியமித்திருந்தார்.
தற்போது இந்த எண்ணிக்கையை ஜனாதிபதி அதிகரிக்கத் தீர்மானித்துள்ளார். அலரி மாளிகையில் ஊடகப் பிரதானிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். காணாமல் போனவர்கள் தொடர்பிலான விவகாரங்களில் மட்டுமே நிபுணர்கள் ஆலோசனை வழங்குவார்கள் எனவும், விசாரணைகளில் பங்கேற்க மாட்டார்கள் எனவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார். இந்த விசாரணைகள் தொடர்பில் எவரும் பதற்றமடைய வேண்டிய அவசியம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.