பிரான்ஸில் மேலும் 3 மாதங்களுக்கு அவசர நிலை நீட்டிப்பு

பிரான்ஸில் அவசர நிலை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளியன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் 129 பேர் கொல்லப்பட்டதை அடுத்து நாட்டில் 12 நாள்கள் அவசர நிலை அமலில் இருக்கும் என அதிபர் பிரான்சுவா ஹொலாந்த் அறிவித்திருந்தார்.

 இந்நிலையில் பயங்கரவாதச் செயல்களைத் தடுக்கும் பொருட்டும், பாதுகாப்புப் பணிகளை தீவிரப்படுத்தும் பொருட்டும் நாட்டில் அவசர நிலையை மேலும் மூன்று மாத காலத்திற்கு நீடிக்க அனுமதி கோரும் மசோதா இன்று பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதவிற்கு ஆதரவாக அந்நாட்டு எம்பிக்கள் வாக்களித்தனர். இதனைத்தொடர்ந்து 3 மாதங்களுக்கு பிரான்ஸில் அவசர நிலை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கபட்டது.

 இதனிடையே சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலைத் தீவிரப்படுத்தக் கோரும் வகையிலான வரைவுத் தீர்மானத்தை ரஷ்யாவுடன் இணைந்து ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சிலில் பிரான்ஸ் தாக்கல் செய்துள்ளது. இது விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்க வேண்டும் எனவும் பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலாந்த் ஐநா பாதுகாப்பு கவுன்சிலை வலியுறுத்தியுள்ளார்.

அவசர நிலைஐ.எஸ் பயங்கரவாதிகள்ஐக்கிய நாடுகள் அவைசிரியாபயங்கரவாதத் தாக்குதல்பிரான்ஸ்
Comments (0)
Add Comment