வடகொரியாவில் உணரப்பட்ட நில அதிர்வுகள் அந்நாட்டு அரசு அணு ஆயுதச் சோதனை நடத்தியதால் ஏற்பட்டிருக்கலாம் எனத் தென்கொரிய அரசு அறிவித்துள்ளது. வடகொரிய அரசுக்குச் சொந்தமான தொலைக்காட்சியும் இதை உறுதி செய்துள்ளது. கடந்த சில மாதங்களாகக் கொரிய தீபகற்பத்தில் வடகொரியா போர்ப்பதற்றத்தை ஏற்படுத்தி வருவதாகப் புகார்கள் எழுந்து வருகின்றன.
ஹைட்ரஜன் குண்டு, அணு ஆயுதங்கள் பரிசோதனை, ஏவுகணை வீச்சு உள்ளிட்ட அந்நாட்டு அரசின் நடவடிக்கைகள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்புக் கொள்கைகளுக்கு முரணானவை எனக் கருதப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வடகொரியா வீசிய ஏவுகணைகள் குறித்துக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் வடகொரிய அரசு வழக்கமாக அணு ஆயுதப் பரிசோதனைகள் நடத்தும் பகுதியில் 5 புள்ளி 3 ரிக்டர் அளவுள்ள நில அதிர்வுகள் உணரப்பட்டன.
இது, அந்நாட்டு அரசு மேற்கொண்ட அணு ஆயுதப் பரிசோதனையின் விளைவாகத் தான் நிகழ்ந்திருக்க வேண்டும் எனத் தென்கொரியப் புவியியல் ஆய்வு மையம் அறிவித்தது. வழக்கமாக நில அதிர்வுகள் பூமியின் ஆழத்தில் இருந்து உருவாகும் நிலையில் தற்போது மேற்பரப்பில் இருந்து அதிர்வுகள் உருவானதாகவும் அந்த அமைப்பு தெரிவித்திருந்தது. இதற்கிடையே, வடகொரிய அரசுக்குச் சொந்தமான KRT தொலைக்காட்சி அந்நாட்டு அரசு அணுகுண்டு சோதனை நடத்தியதை உறுதி செய்துள்ளது. இது குறித்துச் செய்தி வெளியிட்டுள்ள KRT, வடகொரியாவின் விஞ்ஞானிகள் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளது.