கொகோஸ் தீவுப் பகுதியில் இடைமறிக்கப்பட்ட படகில் இருந்த 41 அகதிகளை, சிறிலங்கா அதிகாரிகளிடம் நேற்று ஒப்படைத்துள்ளதாக அவுஸ்ரேலிய அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
அவுஸ்ரேலிய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால், மட்டக்களப்புத் துறைமுகத்துக்கு அப்பால் கடலில் வைத்து சிறிலங்கா அதிகாரிகளிடம் இவர்கள் ஒப்படைக்கப்பட்டதாக, அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொறிசன் தெரிவித்துள்ளார்.
கொகோஸ் தீவுக்கு மேற்கே கடந்த மாத இறுதியில் இடைமறிக்கப்பட்ட படகில் இருந்தவர்களே இவ்வாறு சிறிலங்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு ஒப்படைக்கப்பட்டவர்களில், 37 பேர் சிங்களவர்கள் என்றும், 4 பேர் தமிழர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், கிறிஸ்மஸ் தீவுக்கு அருகே இடைமறிக்கப்பட்ட 153 தமிழ் அகதிகளுடன் சென்ற படகு பற்றிய விபரங்கள் எதையும் வெளியிடாமல் அவுஸ்ரேலிய அரசாங்கம் இருட்டடிப்புச் செய்து வருகிறது.
அந்தப் படகில் இருந்த 11 பேர் சிறிலங்கா கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.இதற்கிடையே, அவுஸ்ரேலியாவின் குடிவரவு அமைச்சர், ஸ்கொட் மொறிசன் இன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
அவர் படகு அகதிகள் விவகாரம் குறித்துப் பேசுவதற்காகவே, கொழும்பு செல்வதாகத் தெரியவந்துள்ளது.