வரும் சனிக்கிழமை நடக்கவுள்ள மேல் மற்றும் தென் மாகாணசபைத் தேர்தலில் சிறீலங்கா அரசாங்கம் கடும் பின்னடைவை சந்திக்கும் என புலனாய்வுப் பிரிவின் அறிக்கை தெரிவித்துள்ளன.
புலனாய்வுப் பிரிவின் இந்த அறிக்கை தொடர்பில் ராஜபக்ஷ குடும்பத்தின் முக்கியஸ்தர்கள் உட்பட சிலர் இணைந்து கடந்த 16 ஆம் திகதி விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளதாக தெரியவருகிறது.
அடுத்த வாரத்தில் சிறீலங்கா அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய புதிய தேர்தல் பிரசார வழிமுறைகள் தொடர்பில் இதன் போது ஆராயப்பட்டுள்ளன. ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை பேரவையில் சிறீலங்காவுக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் அதனை வெற்றிக்கு சாதகமாக பயன்படுத்தும் சந்தர்ப்பம் மிகவும் குறைவாகவே இருப்பதாக இந்த கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதச் சம்பளம் பெறும் நபர்கள், புத்தஜீவிகள், கலைஞர்கள் முக்கியமாக பெண்களின் ஆதரவை பெறுவதை இலக்காக கொண்ட விசேட தேர்தல் பிரசாரத்தை முன்னெடுக்கும் திட்டங்கள் இதன் போது வகுக்கப்பட்டுள்ளன. அத்துடன் சிறீலங்கா அரசாங்கத்திற்கு மக்களிடம் இருக்கும் ஆதரவை அறிந்து கொள்ள மற்றுமொரு புலனாய்வு அறிக்கையை பெறவேண்டும் என்றும் இதன் தீர்மானிக்கப்பட்டதாக சிறீலங்கா அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.