Designed by Iniyas LTD
அபாயத்தைக் கண்டு மனம் உடையவோ, விரக்தியடைவோ கூடாது – போப்பாண்டவர் பிரான்சிஸ்
கத்தோலிகர்களின் தலைமையகமான வாடிகனில், பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்துவதற்கான அபாயம் இருப்பதாகக் போப்பாண்டவர் பிரான்சிஸ் வியாழக்கிழமை கூறினார்.
வாடிகனில் பாதுகாப்புப் பணியை கவனித்து வரும் இத்தாலிய போலீஸாரிடையே வியாழக்கிழமை ஆற்றிய புத்தாண்டு உரையில் அவர் கூறியதாவது:
மனித குலத்தை கவலையடையச் செய்துள்ள பயங்கரவாதத்தின் நிழலும், அதன் அபாயமும் நம் மீது படிந்துள்ளன.
எனினும், கிறிஸ்தவர்கள் என்ற முறையில் நாம் இந்த அபாயத்தைக் கண்டு மனம் உடையவோ, விரக்தியடைவோ கூடாது என்றார் போப்பாண்டவர்.
ஐ.எஸ். அமைப்புக்கு எதிராகவும், அவர்கள் மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் நிகழ்த்திவரும் வான்வழித் தாக்குதல்களுக்கு ஆதரவாகவும் போப்பாண்டவர் பேசி வருகிறார்.
இதனால் அவரைக் கொல்ல ஐ.எஸ். பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக வாடிகனுக்கான இராக் தூதர் அல் சாதர் கூறினார்.
வாடிகனில் தாக்குதல் நிகழ்த்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகக் கிடைத்த உளவுத் தகவலையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
பாரீஸ் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இத்தாலி தலைநகர் ரோமிலும், வாடிகன் நகரிலும் இத்தாலிய உள்துறை அமைச்சகம் உஷார் நிலையை அறிவித்தது.