தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கை இறுதிப்போரில் நடந்தது இனப்படுகொலையே – மன்னார் ஆயர்

இலங்கையின் உள்நாட்டுப்போரின் இறுதியில், நாட்டின் வடக்கே விஸ்வமடு அருகில் 30,000 முதல் 35,000த்துக்கும் அதிகமான சடலங்கள் இருந்ததாக அந்த சடலங்களுக்கு பிரேதபரிசோதனை செய்யச் சென்ற அதிகாரிகள் மூலம் அறிந்ததாக மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் தெரிவித்திருக்கிறார்.Rayappu-Joseph

இரண்டு கிழமைகளுக்கு முன்னரே தமக்கு இந்த தகவல் தெரியவந்ததாக தெரிவித்த ராயப்பு ஜோசப், இலங்கை போரின் இறுதிப்போரில் நடந்தது இனப்படுகொலையே என்று இலங்கையின் வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சரியென்றும் தெரிவித்தார்.

போரின் இறுதி எட்டுமாத காலத்தில் 1,46,679 மக்களுக்கு என்ன ஆனது என்கிற கணக்கு கொடுக்க முடியாமல் இருப்பதாகவும், அவர்கள் எங்கே என்று இன்றுவரை தெரியவில்லை என்றும் தெரிவித்த மன்னார் ஆயர், இலங்கையின் திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கைகள் போருக்குப் பிறகும் தொடர்வதாகவும் தெரிவித்தார்.

இலங்கையில் நடந்த போர்க்கால மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை அரசு நடத்தப்போவதாக கூறும் புதிய உள்நாட்டு விசாரணையால் எந்த பயனும் ஏற்படாது என்று தெரிவித்த மன்னார் ஆயர், ஐநா மன்றத்தின் மேற்பார்வையிலான சர்வதேச விசாரணையே உண்மைகளை வெளியில் கொண்டுவர உதவும் என்றும் கூறினார்.

Comments
Loading...