தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சிறீலங்காவில் போர் இழப்பு மதிப்பீட்டில் அச்சம் காரணமாக மக்கள் தவறான தகவல்களை வழங்கியுள்ளனர்

உள்நாட்டுப் போரினால் உயிரிழந்த அல்லது காயமடைந்த நபர்கள் மற்றும் சொத்துச் சேதங்கள் பற்றிய தொகை மதிப்பீடு என்ற பெயரில் அண்மையில் அரசால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் போது முழுமையான – சரியான – நேர்த்தியான தகவல்களை உண்மையைச் சொன்னால் எதிர்காலத்தில் படையினரால் அல்லது பொலிஸாரால் இடைஞ்சல்கள் – அபாயங்கள் ஏதாவது ஏற்படுமோ என்ற அச்சம் காரணமாகவே தமிழ் மக்கள் பலர்  உண்மைத் தகவல்களை வேண்டுமென்றே தவிர்த்து அல்லது திரித்து அவற்றை வழங்கியுள்ளார்கள் என்று அதிகாரிகள் கூறுகின்றார்கள்.ஈழ மக்கள்

 முதலில் உண்மையான விவரங்களைப் பதிவுசெய்த பல குடும்பத்தினர்கூட பின்னர் கிராம அலுவலர்களை நாடி, அந்தத் தகவல்களை நீக்கிக் கொண்டனர் அல்லது மாற்றிப் பதிவு செய்தனர்

இதனால், 1982ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரையிலான போர்க்கால உயிரிழப்புக்கள், காணமல்போனோர், சொத்தழிவுகள் தொடர்பில் புள்ளிவிவரவியல் திணைக்களம் மற்றும் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு என்பன இணைந்து நடத்திய இந்தக் கணக்கெடுப்பின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகியுள்ளது.

குறிப்பாக, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து உயிரிழந்த குடும்ப உறுப்பினர்கள் குறித்த விவரங்கள் அதிக அளவில் தவிர்க்கப்பட்டுள்ளன அல்லது திரிக்கப்பட்டுள்ளன என்று பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“உயிரிழந்த புலிகள் பற்றிக் குறிப்பிடும் போது பலர் அவர்கள் வெளி நாடுகளில் வசிக்கிறார்கள் என்று தெரிவித்தனர். அவர்கள் உயிரிழந்தனர் என்ற தகவலைக் கொடுத்தால் எவ்வாறு அவர்கள் உயிரிழந்தனர் என்ற விவரங்களைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதும் ஒப்புதல் வாக்கு மூலம் போன்று அந்த விவரங்களைக் கொடுத்தால் எதிர்காலத்தில் தமக்கு அதனால் ஆபத்து ஏற்படக்கூடும் என்றும் மக்கள் அஞ்சியதே அதற்குக் காரணம்” என்றார் அந்த அதிகாரி.

 “தனது பிள்ளை போரில் இறந்து போனதாக மனைவி குறிப்பிட்டதைப் பின்னர் கணவர் நீக்கிய சம்பவங்களும் இடம் பெற்றுள்ளன. உண்மையான தகவல்களை வழங்கினால் பொலிஸார், இராணுவத்தினர், புலனாய்வாளர்களால் அச்சுறுத்தல் வரும் என்று அவர்கள் காரணம் கூறினர்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 போரின்போது குடும்பம் குடும்பமாக உயிரிழந்தவர்களின் விவரங்கள் மற்றும் குடும்பங்களாகப் புலம்பெயர்ந்தவர்களின் குடும்பங்களின் விவரங்கள் கணக்கெடுப்புக்குள் உள்ளடக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே எழுப்பப்பட்டிருந்தது.

 இதனால் இந்தக் கணக்கெடுப்பை ஏற்றுக் கொள்ளமுடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே நிராகரித்திருந்தது. உண்மையான விவரங்களைப்பெற தனியாக ஒரு கணக்கெடுப்பை நடத்தப் போவதாக கூட்டமைப்பு அறிவித்திருந்தபோதும் அந்தப் பணிகள் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை.

 இதற்கிடையில், எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் வழங்கப்பட்ட விபரங்களும் முழுமையானவை அல்ல என்ற தகவல் வெளியாகி இருப்பது மதிப்பீட்டின் நம்பகத் தன்மையை மேலும் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.

கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்களும் இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே அமைகின்றன. 1982 மற்றும் 2009ஆம் வருடங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் போரால் வடக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 30 ஆயிரம் என்று தொகை மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக “உதயன்’ நம்பகமாக அறிந்தது.

 ஆனால் 2006 இல் மாவிலாற்றில் போர் ஆரம்பித்தது முதற்கொண்டு 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி போர் முடிவுக்கு வந்தது வரையில் 22,247 விடுதலைப் புலிகள் உயிரிழந்தனர் என்று இலங்கை இராணுவத்தினர் அறிவித்திருக்கின்றனர் என்று கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழவின் அறிக்கை குறிப்பிடுகின்றது.

 இதனுடன் ஒப்பிடுகையில் தற்போது எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின் முடிவு முரண்பாடானதாகவே காணப்படுகின்றது. குறிப்பாக, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து உயிரிழந்த குடும்ப உறுப்பினர்கள் குறித்த விவரங்கள் அதிக அளவில் தவிர்க்கப்பட்டுள்ளன.

Comments
Loading...