தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழர் பிரச்சனையை மைத்திரி தீர்த்து வைப்பாராம் – விக்னேஸ்வரன்

புதிய ஜனாதிபதியாகிய உங்கள் தலைமையில் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்குமென்ற முழுமையான நம்பிக்கை எமக்குள்ளது என வட மாகாண முதலமைச்சர் சீ. வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர், 1948லிருந்து தொடரும் தேசிய பிரச்சினைக்கு உங்கள் தலைமையிலான அரசாங்கம் நிரந்தர தீர்வினைப் பெற்றுக்கொடுக்கும் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.wigneswara

அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் உட்பட அமைச்சர்கள், மாகாண அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள், அரசியல் பிரமுகர்கள், அரசாங்க அதிகாரிகள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய முதலமைச்சர் விக்னேஸ்வரன்,

எமது மாகாணத்திற்கு வருகை தந்துள்ள உங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

தேசிய பிரச்சினைக்கு மூளையின் மூலமன்றி இதயத்திலிருந்தே தீர்வு காண முடியும். மனங்களில் மாற்றமேற்பட்டு சிந்தனை மாற்றம் ஏற்படுதல் இதற்குமிக அவசியமாகும்.

பெளத்த மதத்தின் முக்கியமான பெரியார்கள் வாழ்ந்த பொலன்னறுவையில் வாழும் உங்களுக்கு அன்றைய மதப்பெரியார்களைப் போன்றே மக்களின் மனங்களில் மாற்றமேற்படுத்துவது இலகுவானது. உங்களால் அது முடியும்.

நான் எனது சிறுபராயத்தில் அநுராதபுரம் மகா போதிக்கருகில் வாழ்ந்தவன். எமது இந்து மக்களும் மஹா போதிக்கு பெரும் கெளரவமளித்து வருகின்றனர். மஹா போதியானது அன்பு கருணை போன்றவற்றை மனதிற்கு வழங்குகின்றது. இதனால் அதனை அண்டி வாழ்ந்த எமக்கும் அன்பும் கருணையும் எப்போதும் எமது மனதில் நிலைத்துள்ளது.

எமது தேசிய பிரச்சினையைப் பொறுத்த வரை 1948 லிருந்து தொடர்கிறது. சில காலங்களில் சிலர் இதனூடே இனவாதத்தைக் கிளப்பினர். இதற்காக மேற்கொள்ளப்பட்ட பல விடயங்கள் பல்வேறு சந்தேகங்களுக்கே வழி வகுத்தன.

13வது திருத்தம் ரணசிங்க பிரேமதாச காலத்திலும் அதற்கு பின்னரான நீதிமன்ற தீர்ப்பிலும் பலமிழந்திருந்தது.

18வது திருத்தம் மற்றும் ‘திவிநெகும’ சட்டம் மூலமும் இது பலமற்றதாக்கப்பட்டதை சகலரும் உணர்வர்.

1987 காலங்களில் தலைவர் அமிர்தலிங்கமும, ஆர். சம்பந்தனும் 13வது திருத்தம் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் மார்க்கமல்ல என்பதை வெளிப்படையாகவே தெரிவித்திருந்தனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் மத்திய அரசின் கருத்தை மாகாண அரசு ஏற்கவேண்டும் என்ற விதத்திலேயே செயற்பட்டார்.

வடக்கு கிழக்கைப் பொறுத்தவரை இரண்டு மாகாணங்களாக இவை இருந்தபோதும் பாரதூரமான ஒரேவிதமான பிரச்சினைகளைக் கொண்ட மாகாணங்களாகவே இருந்தன.

இரண்டும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாகாணங்கள் என்ற ரீதியில் இவற்றுக்கு முக்கிய கவனம் செலுத்தி செயற்படுவது முக்கியமாகும்.

மேலும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் பிரச்சினை பற்றி ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும். வழக்குத் தொடரப்படாதவர்களை மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதற்கு கவனம் செலுத்த வேண்டும் எனவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.

அரச துறைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புதல் மற்றும் சுன்னாகம் குடிநீர் பிரச்சினை போன்றவை தொடர்பில் ஜனாதிபதி தமது மேலான கவனத்தை செலுத்தி தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

Comments
Loading...